விரும்பும் பதிவைத் தேடுக !

Showing posts with label ஈன்று புறந் தருதல். Show all posts
Showing posts with label ஈன்று புறந் தருதல். Show all posts

Wednesday, 2 September 2026

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (312) ஈன்று புறந்தருதல் !

 

புறநானூறு (312) ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே !

 

=============================

பாடியோர்:

=============================

பொன்முடியார். பொன்முடியார் சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் பெண்புலவர். மறக்குடியில் பிறந்தவராக குறிப்புகள் கிடைகின்றன. இவர் சேரநாட்டின் ஒரு பகுதியான குட்டநாட்டின் வடக்குப்பக்கத்தில் பொன்முடி நல்லூர் என்னும் ஊரில் பிறந்தவர் ஆவார். இவரின் பெருமையைப் பாராட்டி அரசர் எவரேனும் பொன்முடி பரிசளித்து இருக்கலாம் என்கிறார் உ.வே.சா.  இவர் இயற்றியதாக  புறநானூற்றில் மூன்று பாடல்கள்  பாடல்கள் உள்ளன. அவை 299, 310, 312 வரிசை எண்களில் உள்ளன. இவரின் பெயரால் பொன்முடி என்ற ஊர் பெயர் உருவாகி, தற்பொழுது அது மருவி பொம்மிடி என மாறி இருக்கலாம். இவ்வூர் இப்பொழுது தருமபுரி மாவட்டத்தில் உள்ளது !

 

=============================

பாடப்பட்டோர்:

=============================

எவருமிலர்.

 

=============================

பாடலின் பின்னணி

==============================

ஒரு சிறந்த போர் வீரனை உருவாக்குவதில் யார் யாருக்குப் பங்கு இருக்கிறது என்பதை விளக்குகிறார் பொன்முடியார் இப்பாடலில் !

==============================

திணை : வாகை.

துறை : மூதில்முல்லை.

===============================

 ==============================================

புறநானூறு (312) ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே !

===============================================

 

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே,
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே,
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே,
நன்னடை  நல்கல் வேந்தற்குக் கடனே,
ஒளிறு வாள் அருஞ்சமம் முருக்கிக் 
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே !

 

===============================================

 

 =============================

சொற்பொருள்:  

==============================

 

ஈன்று புறம் தருதல் = பெற்று, பாலூட்டி, சீராட்டி வளர்த்து விடுதல் ;  என்தலைக் கடனே =  தாயாகிய எனது முதன்மையான கடமை ஆகும்; சான்றோன் ஆக்குதல் =  நற்பண்புகளும் நல்லியல்புகளும் உடையவனாக வளர்த்தல் ; தந்தைக்குக் கடனே =  தந்தையின் கடமை ஆகும்  ; வேல் =  வடித்துக் கொடுத்தல் – போர்க்கருவியான வேலைச் செய்து கொடுத்தல் ; கொல்லற்குக் கடனே = இரும்பு வினைஞரின் (கொல்லனின்) கடமை ஆகும்.

 

நன்னடை நல்கல் =  நல்ல போர்ப் பயிற்சியை அளிக்கச் செய்வது ;   வேந்தற்குக் கடனே – வேந்தனின் கடமையாகும். ஒளிறு வாள் அருஞ் சமம் முருக்கி =  ஒளிரும் வாள் கொண்டு போர் செய்து ; களிறு எறிந்து = தன்னைக் கொல்ல வரும் யானையை வேல் கொண்டு தாக்கிக் கொன்று ;  பெயர்தல் – வெற்றியோடு மீளுதல், காளைக்குக் கடனே – இளங் காளையான ஆண்மகனின் கடமை யாகும் !

 

=============================

பொருளுரை:  

=============================

 

மகனைப் பெற்று வளர்த்து ஆளாக்குதல் எனது முதன்மையான கடமை.  அவனைக் கல்வியும், நற்பண்புகளும் நிறையப் பெற்ற சான்றோனாக ஆக்குவது அவனுடைய தந்தையின் கடமை.  அவனுக்குக் கூரிய வேலை வடித்துக் கொடுப்பது கொல்லனின் கடமை.  நல்ல போர்ப் பயிற்சியை அளிக்கச் செய்வது நாட்டை ஆளும் வேந்தனின் கடமை.  ஒளிரும் வாளை ஏந்திப் போர் செய்து பகைவரின் யானைகளைக் கொன்று வெற்றியோடு திரும்பி வருவது அந்த இளைஞனின் கடமை !

 ===============================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)16]

(02-09-2026)

================================================ 

தாயும் சேயும்