விரும்பும் பதிவைத் தேடுக !

Thursday 23 December 2021

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (290) நுந்தை தந்தைக்கு இவன் தந்தை !

ஆரைக் கால்கள் போல் அம்புகள் மார்பில் பாய்ந்து !

 ----------------------------------------------------------------------------------------------

பாடலின் பின்னணி: 

---------------------------------

ஒருஅரசனின் ஆநிரைகளை (பசுக் கூட்டத்தினைமற்றொரு அரசனின் வீரர்கள் கவர்ந்து சென்றனர். ஆநிரைகளை இழந்த அரசன் அவற்றை மீட்பதற்காகக் கரந்தை மலர் சூடிப் போர் நடத்த விரும்பினான். அவன் தன் நாட்டிலுள்ள வீரர்களைப் போருக்கு வருமாறு அழைத்தான். அரசனின் அழைப்பிற்கிணங்கிவீரர்கள் பலரும் ஒன்று கூடினர். போருக்குப் போகுமுன் அரசன் வீரர்களுக்கு விருந்தளித்துஅவர்களின் வீரச் செயல்களைப் புகழ்வது வழக்கம். அவ்விருந்தில்ஒளவையாரும் கலந்துகொண்டார். 

 

வீரர்களைப் புகழும் பணியை ஒளவையார் மேற்கொண்டார். ஒரு வீரனின் குடிப்பெருமையைக் கூற விரும்பிய ஒளவையார், “அரசேஇவன் பாட்டன் உன் பாட்டனின் உயிரைக் காப்பதற்காகவண்டியின் குடத்தில் ஆரக்கால்கள் போல் தன் உடல் முழுதும் வேல்கள் பாய்ந்து இறந்தான். இவனும்தன் பாட்டனைப்போல்உன்னை மழையிலிருந்து காக்கும் பனையோலைக் குடைபோலக் காப்பான்.” என்று கூறுவதை இப்பாடலில் காணலாம்.

----------------------------------------------------------------------------------------------

புறநானூறுபாடல்.290.

-----------------------------------------------------------------------------------------------

இவற்குஈத்து உண்மதி கள்ளேசினப்போர்   (01)
இனக்களிற்று யானைஇயல்தேர்க் குருசில்!
நுந்தை தந்தைக்கு இவன்தந்தை தந்தை,
எடுத்துஎறி ஞாட்பின் இமையான்தச்சன்
அடுத்துஎறி குறட்டின்நின்று மாய்ந் தனனே: (05)
மறப்புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும்
உறைப்புழி ஓலை போல,
மறைக்குவன் பெருமநிற் குறித்துவரு வேலே. (08)
----------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------

வரி.(01) இவற்கு = இவனுக்கு ஈத்து = கொடுத்து ; உண்மதி = உண்பாயாக ;மதி – அசைச்சொல் ;  சினப்போர் = சினம் கொண்டு போரில் ஈடுபடல்

வரி.(02) இனக் களிற்று யானை = யானைக் கூட்டம் ( படை); இயல் தேர் = புதிதாகச் செய்யப்பட்ட தேர் ;  குருசில் = மன்னன் ;

வரி.(03). நுந்தை = உன் தந்தை ; தந்தைக்கு = (உன் தாத்தாவுக்கு) ; இவன் தந்தை = இவனுடைய தந்தைக்கு ; தந்தை = (இவன் தாத்தா) ;

வரி.(04). ஞாட்பின் = போர்க்களத்தில் ; எடுத்து எறி = பகைவர்கள் உன் பாட்டனை நோக்கி வீசிய  வேல்களை ;  இமையான் =  கண் இமைக்காமல் இவன் பாட்டன் தாங்கிக் கொண்டான்; தச்சன் = மரக் கலைஞன்

வரி.(05). அடுத்து எறி குறட்டின் = வண்டிச் சக்கரத்தின் குடத்தில் செருகி வைத்திருக்கும்  ஆரக் கால்கள் போல ; நின்று = வேல்களைத் தன் மார்பில் தாங்கி நின்று ; மாய்ந்தனனே = இறந்து போனான்.

வரி.(06). மறப்புகழ் = வீரத்தினால் விளைந்த புகழ் ; நிறைந்த மைந்தினோன் = நிரம்பப் பெற்றுள்ள வீரனாகிய ; இவனும் = இந்த படை வீரனும் ;

வரி.(07). உறைப்புழி =  மழை பெய்யும் பொழுது ; ஓலை போல = அதனின்று நம்மைப் பாதுகாக்கும் ஓலைக் குடை போல ;

வரி.(08). மறைக்குவன் = மறைத்து நிற்பான் ; பெரும = மன்னனே ;  நிற்குறித்து = உன்னை நோக்கி ; வருவேலே = வருகின்ற வேல்களை !

-------------------------------------------------------------------------------------

பொருளுரை:

-------------------------

அரசேமுதலில் கள்ளை இவனுக்கு அளித்து பின்னர் நீ உண்பாயாக; சினத்துடன் போர் செய்யும், யானைகளையும், நன்கு செய்யப்பட்ட தேர்களையும் உடைய தலைவனே ! உன் பாட்டனை நோக்கிப் பகைவர்கள் எறிந்த வேல்களைக் கண் இமைக்காமல் இவன் பாட்டன் தாங்கிக் கொண்டான் ! தச்சனால் வண்டியின் குடத்தில் செருகப்பட்ட ஆரக் கால்கள் போல் அவன் காட்சியளித்து இறந்தான் ! வீரத்துடன் போர் செய்து புகழ்பெற்ற வலிமையுடைய இவன், மழை பெய்யும் பொழுது நம்மை அதனின்று காக்கும் பனையோலையால் செய்யப்பட்ட குடை போல் உன்னை நோக்கி வரும் வேல்களைத் தாங்கி உன்னைக் காப்பான்” !

--------------------------------------------------------------------------------------------
காலக் கண்ணாடி:

-------------------------------

இப்பாடலிலிருந்து நாம் வரலாற்றுச் செய்திகள் சிலவற்றையும் தெரிந்துகொள்ள முடிகிறது !

 

(01)பண்டைத் தமிழர்கள்  சக்கரத்தின்  பயன்பாட்டைக் கண்டு பிடித்தவர்கள் என்பது, வண்டிக் குடத்தில் ஆரக் கால்களைச் செருகுதல்  என்னும் உவமையினாலும் தேர்ப்படையை வைத்திருந்தர்கள் என்னும் செய்தியினாலும்  தெரியவருகிறது !

(02)உடல் வலிமைக்காகப் பண்டைத் தமிழ்ப் படைவீரர்கள்  கள் உண்டார்கள் என்பது இப்பாடலின் கருத்தின் மூலம் விளங்குகிறது. இக்காலத்தைப் போல் மயக்க உணர்வுக்காக (போதை) கண்ட்தையும் அவர்கள்  அருந்தவில்லை !

 

புறநானூறு என்பது பண்டைய தமிழகத்தின் வளத்தையும் மாண்பையும் உணர்த்தும் காலக் கண்ணாடியாகத் திகழ்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை !


ஆக்கம் + இடுகை:

 வை.வேதரெத்தினம்,

 ஆட்சியர்,

 தமிழ்ப் பணி மன்றம்.

 [தி.: 2050, மீனம், 08]

 {22-03-2019)

 ----------------------------------------------------------------------------------------------



  

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (229) ஆடு இயல் அழல் குட்டத்து !

ஒரு பங்குனி மாதத்து முன்னிரவில் ! 

------------------------------------------------------------------------------

பண்டைத் தமிழர்கள் பல துறைகளிலும் வல்லவர்களாக இருந்திருக்கிறார்கள் ! வானவியலிலும் சிறந்து விளங்கி இருக்கிறார்கள் !


ஆனால் வானவியல் என்பது ஆரியர்களின் வருகைக்குப் பிறகு கணியம் (சோதிடம்என நீட்சி பெற்றுதவறான நம்பிக்கைகளை வளர்க்கும் நாற்றங்காலாக மாறியது தான்  காலத்தின் கோலம் ! புறநானூறில் ஒரு பாடல் ! வானவியல் தொடர்பான செய்திகளைத் தரும் இப்பாடல்விண்வீழ் கொள்ளி விழுந்த நிகழ்வுடன்சேர மன்னன் இறந்த நிகழ்வை முடிச்சுப் போட்டுப் பார்ப்பது தான் ஆரிய நாகரிகத்தின் தாக்கம் போலும் !


------------------------------------------------------------------------------------------------

பாடப்பெற்றவன்: கோச்சேரமான் யானைக்கட்சேய் 

மாந்தரஞ்சேரல் இரும்பொறை.

பாடியவர்:  புலவர் கூடலூர் கிழார

------------------------------------------------------------------------------------

 

     ஆடு இயல் அழல் குட்டத்து

          ஆர்  இருள்  அரை இரவில்,

     முடப் பனையத்து வேர் முதலாக்

          கடைக் குளத்துக்  கயம்  காய,

     பங்குனி உயர் அழுவத்துத்

          தலைநாள் மீன் நிலை திரிய,

     நிலைநாள் மீன் அதன்எதிர் ஏர்தர,

          தொல்நாள் மீன் துறைபடிய,

     பாசிச் செல்லாது ஊசி முன்னாது,

          அளக்கர்த் திணை விளக்காகக்

     கனைஎரி பரப்ப, கால்எதிர்பு பொங்கி

          ஒருமீன் விழுந்தன்றால்விசும்பினானே !

     அதுகண்டு, யாமும், பிறரும் பல்வேறு இரவலர்

          பறைஇசை அருவி நன்னாட்டுப் பொருநன்

     நோயிலன் ஆயின் நன்று ! மற்று இல்லென

          அழிந்த நெஞ்சம் மடியுளம் பரப்ப,

     அஞ்சினம் எழுநாள் வந்தன்று இன்றே;

          மைந்துடை யானை கைவைத்து உறங்கவும்

     திண்பிணி முரசும் கண்கிழிந்து உருளவும்

          காவல் வெண்குடை கால்பரிந்து உலறவும்

     கலிமாக் கதிஇன்றி வைகவும்,

          மேலோர் உலகம் எய்தினன் ஆகலின்

     ஒண்தொடி மகளிர்க்கு உறுதுணை ஆகித்

          தன்துணை ஆயம் மறந்தனன் கொல்லோ !

     பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல், நசைவர்க்கு

          அளந்துகொடை அறியா ஈகை,

     மணிவரை அன்ன மாஅ யோனே !

 

-------------------------------------------------------------------------------------------------

 பாடலின் பொருள் அடி நேருரையாகத் தரப்படுகிறது ]

 ------------------------------------------------------------------------------------------------

பங்குனி உயர் அழுவத்து = ஒரு பங்குனி மாதத்து நடுப் பகுதியையொட்டி,

 

ஆர் இருள் அரை இரவில் = செறிந்த இருள் சூழ்ந்த இரவு நேரத்தில்,

 

முடப் பனையத்து வேர் முதலா = வளைந்த பனை போன்ற தோற்றம் உடைய அனுச மீன் கூட்டத்தினை அடுத்து வருகின்ற கேட்டை மீன் தொடங்கி,

 

கடைக் குளத்துக் கயம் காய = கயம் எனப்படும் குளம் போல் தோற்றம் அளிக்கும் புனர்பூச மீனுக்கு முன்னதாக  உள்ள திருவாதிரை மீன் வரை உள்ள 13 மீன்களும் வானிலே ஒளிவிட்டுத் திகழ,


கேட்டைஅனுஷம்விசாகம்சுவாதிசித்திரைஅஸ்தம், உத்தரம், பூரம், மகம், ஆயில்யம், பூசம், புனர்பூசம், திருவாதிரை = 13]

  

தலைநாள் மீன் நிலை திரிய = அப்பொழுது வானின் உச்சியில் இருந்த உத்தரம் என்னும் மீன் அவ்வுச்சியிலிருந்து மேல் திசை நோக்கிச் சாய்ந்தது (நகர்ந்தது) !

 

நிலைநாள் மீன் அதன் எதிர் ஏர் தர = அதே நேரத்தில் அந்த உத்தர மீனிலிருந்து  எட்டாவதாக வரும் மூலம் மீன் கீழ்த் திசையில் அடிவானத்தில் எழுந்தது !

 

[(1) உத்தரம் (2) அத்தம், (3) சித்திரை, (4) சுவாதி, (5) விசாகம், (6)   அனுசம், (7) கேட்டை, (8) மூலம். ]

 

தொல் நாள் மீன் துறை படிய  = அந்த உத்தர மீனுக்கு முன்னதாக மேல் திசை நோக்கி நகர்ந்து சென்றவற்றுள்   எட்டாவதாக அமையும் மீனாகிய மிருகசீரிடம் அடிவானில் மறையும் அந்த நேரத்தில்,

 

[(1) உத்தரம் (2) பூரம் (3) மகம் (4) ஆயில்யம் (5) பூசம் (6) புனர்பூசம் (7) திருவாதிரை (8) மிருகசீரிடபம். ]

 

ஒருமீன் = ஒரு விண்வீழ் கொள்ளியானது,

 

பாசிச் செல்லாதுஊசி முன்னாது = கிழக்கும் போகாமல்வடக்கும் போகாமல்வடகிழக்காக

 

அளக்கர்த் திணை விளக்காக = கடல் சூழ்ந்த உலகுக்கு விளக்குப் போல்,

 

கனை எரி பரப்பகால் எதிர்பு பொங்கி = காற்றில் கிளந்து எழுந்துதீப் பரந்து,

 

ஆடு இயல் அழல் குட்டத்து = ஆடு போன்ற தோற்றம்  உடைய மேழ இராசியில் நிலைத்திருக்கும் கார்த்திகை மீனின் முதலாம் பாதம் நோக்கி,

 

விழுந்தன்றால்விசும்பினானே = விசும்பிலிருந்து வீழ்ந்தது !

 

அது கண்டு யாமும் பிறரும் பல்வேறு இரவலர் = அதைக் கண்டுயாமும் பிறரும்பல்வேறு இரவலரும்,

 

இது ஒரு தீய அறிகுறி ஆயிற்றேஎன்று அன்று கவலை கொண்டோம் ! ]

 

பறை இசை அருவி நல் நாட்டுப் பொருநன் = பறை ஓசை போல் ஒலிக்கும்  அருவிகள் நிறைந்த நல்ல மலை நாட்டின் தலைவனாகிய சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறை,

 

நோய் இலன் ஆயின் நன்று மற்று இல் என =  நோயின்றி நலமுடன் இருக்க வேண்டுமே என்று எண்ணி ஏங்கினோம் !

 

அழிந்த நெஞ்சம் மடிஉளம் பரப்ப = வருந்திய நெஞ்சத்துடன் வாடிக் கலங்கி,

 

அஞ்சினம் = அஞ்சினோம் !

 

எழு நாள் வந்தன்று - அந்த மீன் நிலம் நோக்கி விழுந்து இன்று ஏழு நாள் ஆகிறது !

 

இன்றே = இன்றைய நாளில்  (யாம் காண்கையில்),

 

மைந்துடை யானை கை வைத்து உறங்கவும் = மன்னனின் பட்டத்து யானை தன் தும்பிக்கையை நிலத்தில் வைத்து உறங்குகிறது !

 

திண் பிணி முரசம் கண் கிழிந்து உருளவும் = வாரால் பிணிக்கப்பட்ட முரசு கிழிந்து உருண்டு கிடக்கிறது !

 

காவல் வெண் குடை கால் பரிந்து உலறவும் = காவலுக்கு அடையாளமாக இருக்கும் வெண் கொற்றக் குடையின் காம்பு ஒடிந்து சிதைந்து காணப்படுகிறது !

 

கால் இயற் கலிமாக் கதி இன்றி வைகவும் =  காற்றைப் போல் கடிது செல்லும் அரசனின் புரவி (குதிரை)  நிலை குலைந்து நிற்கிறது !

 

இவை எல்லாம் நல்ல குறிகளாகத் தோன்றவில்லையே ! ]

 

ஆகலின் = ஆகையால்

 

ஒண் தொடி மகளிர்க்கு உறு துணை ஆகி = தன் மனைவியர்க்கு உற்ற துணைவனாக இலங்கிய சேர மன்னன்,

 

தன் துணை ஆயம் மறந்தனன் கொல்லோ = தன் மனைவியரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டானோ ?  ஆமாம் !

 

பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல்நசைவர்க்கு = பகைவரைக் கொல்லும் வலிமையும்தன்னை நாடி வந்தவர்களுக்கு

 

அளந்து கொடை அறியா ஈகை = அளவற்ற பொருள்களை அளித்த கொடை வள்ளலும்

 

மணி வரை அன்ன  மாஅயோனே ? = நீல நிறமுடைய திருமால் போன்றவனுமாகிய சேரன்

 

மேலோர் உலகம் எய்தினன் = இயற்கை எய்தி விட்டான்  என்பது மேற்கண்ட நிகழ்வுகளிலிருந்து உறுதியாகத் தெரிகிறது  !

 

----------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

 

ஒரு பங்குனி மாதத்து முன்னிரவில்கிழக்கே அடிவானத்தில்  கேட்டை மீன் தொடங்கிமேற்கே திருவாதிரை ஈறாக 13 மீன்களும் வானில் மின்மினி போல்  கண் சிமிட்டிக் கொண்டிருக்கஉச்சி வானில்  இருக்கும் உத்தர மீன் மெல்ல மேற்கு நோக்கி நகர்கிறது !

 

இந்த நேரத்தில் விசும்பிலிருந்து ஒரு விண்வீழ் கொள்ளியானதுமேழ மண்டலத்தில் இருக்கும் கார்த்திகை மீன் நோக்கி விழுகிறது ! இதைக் கண்ணுறும் யாமும்எம்முடன் இருந்த பிறரும்இரவலர்களும்இஃதோர் தீக்குறி ஆயிற்றேஎம் மன்னனாகிய சேரன் இரும்பொறைக்கு இஃது ஆகாதேஅவன் நலமுடன் இருக்க வேண்டுமே என்று மிக்க கவலை கொண்டோம் !

 

இது நிகழ்ந்த ஏழாம் நாள் மன்னனைக் காண அரண்மனைக்குச்  செல்கிறோம் ! அங்குமண்ணில் படுத்தறியாத மன்னனின் பட்டத்து யானை தரையில் கைவைத்துக் கிடக்கிறது ! அவனது வெற்றி முரசு தரையில் வீழ்ந்து கிடக்கிறது ! வெண்கொற்றக் குடையைத் தாங்கி நிற்கும் காம்பு உடைந்து கிடக்கிறதுமன்னனின் தனிப் புரவி நிலையின்றித் தவிக்கிறது !

 

இவற்றை எல்லாம் காண்கையில் விண்வீழ் கொள்ளி விளம்பிய தீயூழ் தன் திறத்தைக் காட்டிவிட்டதோ என்று தோன்றுகிறது ! தன் துணைவியைப் பிரிந்து மன்னன் விண்ணுலகம் சென்றுவிட்டானோ ? ஆம் ! அப்படித்தான் தோன்றுகிறது !


ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

 ஆட்சியர்,

 தமிழ்ப் பணி மன்றம்,

 [தி.:2050: நளி (கார்த்திகை) 22]

 {8-12-2019}