விரும்பும் பதிவைத் தேடுக !

Friday, 28 August 2026

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை ) (05) வாள் வலந்தர மறுப் பட்டன !

 

புறநானூறு . (04). வாள் வலந்தர மறுப் பட்டன !

==============================

பாடியவர்: 

==============================


பரணர்சங்க காலப் புலவர்களில் மிகவும் சிறந்த புலவர்களில் ஒருவர் பரணர். இவர், புறநானூற்றில் 13 செய்யுள்களும், அகநானூற்றில் 16 செய்யுள்களும், நற்றிணையில் 12 செய்யுள்களும், பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்தும் பாடியுள்ளார். இவர் பாடல்கள் வரலாற்றுச் செய்திகள் நிறைந்தவை !

 

==============================

பாடப்பட்டோன்: 

==============================


சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி.  இவன் வரலாற்றில் இடம் பெற்ற முதல் சோழ மன்னன் என்று கருதப்படுகிறது. இளஞ்சேட்சென்னியின் காலம் கி.பி. முதலாம் நூற்றாண்டின் இடைப் பகுதி என்று கருதப்படுகிறது. பொருநராற்றுப்படையில், கரிகாலனை “உருவப் பஃறேர் இளையோன் சிறுவன்” என்று அதன் ஆசிரியர் முடத்தாமக் கண்ணியார் குறிப்பிடுவதிலிருந்து இவன் கரிகாலனின் தந்தை என்பது தெரிய வருகிறது !

 

=============================

பாடலின் பின்னணி:

==============================

 

இப்பாடலில் புலவர் பரணர், சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியின் காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை ஆகிய நான்கும் போரில் சிறந்து விளங்குவதைப் பாராட்டுகிறார். சோழன் தேரில் வருவது கடலினின்று கதிரவன் எழுவது போல் உள்ளது என்று அவனைப் புகழ்கிறார். அவனோடு போர் புரிந்த பகைவரின் நாடு தாயில்லாக் குழந்தை போல் ஓயாது கூவி வருந்தும் என்றும் கூறுகிறார் !

 

=============================================
திணை: வஞ்சி. (ஞ்சிப் பூவைத் தலையில் சூடிப் பகைவரின் நாட்டைக் கைக்கொள்ளக் கருதிச் செல்லுதல்)

=============================================
துறை: கொற்ற வள்ளை. (அரசனுடைய வெற்றியைக் கூறி பகைவரின் நாட்டின் அழிவை உரைத்தல்)
==============================================
புறநானூறு – பாடல் (04) வாள்வலந்தர மறுப் பட்டன !

==============================================

 

வாள்வலந்தர மறுப் பட்டன
செவ் வானத்து வனப்புப் போன்றன!
தாள் களங்கொளக் கழல் பறைந்தன
கொல் ஏற்றின் மருப்புப் போன்றன;
தோல் துவைத்து அம்பின் துளைதோன்றுவ
நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன;
மாவே எறிபதத்தான் இடம் காட்டக்
கறுழ் பொருத செவ்வாயான்
எருத்து வவ்விய புலி போன்றன;
களிறே கதவு எறியாச் சிவந்து உராஅய்
நுதி மழுங்கிய வெண் கோட்டான்
உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன;
நீயே, அலங்கு உளைப் பரீஇ இவுளிப்
பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி
மாக் கடல் நிவந் தெழுதரும்
செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ!
அனையை ஆகன் மாறே
தாய்இல் தூவாக் குழவி போல
ஓவாது கூஉம் நின் உடற்றியோர் நாடே.

 ==========================

அருஞ்சொற்பொருள்:

===========================


வாள் வலம் தர = போரில் வெற்றியை ஈட்டும் வகையில் ; மறுப்பட்டன = வீரர்களின் வாள்கள் பயன்படுத்தப்பட்டதால் அவற்றில் குருதிக்கறை படிந்திருக்கிறது ;  செவ் வானத்து = ஆகையால் செவ்வானம் போன்ற ; வனப்புப் போன்றன = அழகுடன் அவை திகழ்கின்றன ; தாள் களங்கொள = வீரர்களின் கால்கள் போர்க்களத்தில் நடை பயில்வதால் ;  

 

கழல் பறைந்தன = வீரர்களின் காற் கழல்கள் தேய்ந்துவிட்டன ;   கொல் ஏற்றின் மருப்புப் போன்றன = ஆகையால் அவை கொல்லும் காளையின் கொம்பு போலத் தோற்றமளிக்கின்றன ;   தோல் = தோலால் செய்யப்பட்ட கேடகம்;  துவைத்து  = குத்துப்பட்டு ; அம்பின் துளை தோன்றுவ ; அம்பு குத்தியதால் துளைகள் தோன்றியுள்ளன ;

 

நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன = அத்துளைகள் மீண்டும் அம்பு செலுத்தக் குறிபார்க்க உதவுகின்றன : மாவே எறிபதத்தான் இடம் காட்ட = குதிரைகள், பகைவரைப் போரில் வெல்லும் பொழுது ; கறுழ் பொருத செவ்வாயான் = கடிவாளம் இடமும், வலமுமாய் இழுக்கப்பட்டதால் குருதி கசிந்து சிவந்த வாய் உடையனவாய் உள்ளன ; எருத்து வவ்விய புலி போன்றன = விலங்குகளைக் கடித்துக் கவ்வியதால் குருதிக்கறை படிந்த புலியின் வாய் போல் உள்ளன !

களிறே கதவு எறியாச் சிவந்து உராஅய் = யானைகள், மதிற்கதவுகளை வெகுண்டு மோதியதால் ; நுதி மழுங்கிய வெண் கோட்டான் = அவற்றின் வெண்ணிறமான தந்தங்கள் மழுங்கின ;  உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன  = அந்த யானைகள் உயிரைக் கொல்லும் இயமனைப் போல் காட்சி அளிக்கின்றன !

நீயே  = நீ ; அலங்கு உளைப் பரீஇ இவுளி = அசையும் பிடரியுடன் விரைந்து ஓடும் குதிரைகள் ; பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி = பொன்னாலான தேர் மீது வருவது ; மாக் கடல் நிவந் தெழுதரும் = பெரிய கடலிலிருந்து எழுந்துவரும் ; செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ = சிவந்த கதிரவனைப் போல ;
 
அனையை = ஒத்திருக்கிறது ; ஆகன் மாறே = ஆகையால் ; தாய்இல் தூவாக் குழவி போல = தாயில்லாத குழந்தைகள் போல் ; ஓவாது கூஉம் = ஓயாது கூவி வருந்துகின்றனர் ; நின் உடற்றியோர் நாடே = உன் பகைவர்கள் நாட்டு மக்கள் !


==============================
பொருளுரை: 

==============================

 

போரில் வெற்றியைத் தரும் வகையில் பயன்படுத்தப் பட்டதால் வீரர்களின் வாள்கள் குருதிக்கறை படிந்து சிவந்த வானத்தைப் போல் அழகாக உள்ளன. வீரர்களின் கால்கள் போர்க்களத்தைத் தமது இருப்பிடமாகக் கொண்டதால் அவர்கள் கால்களில் அணிந்த கழல்கள் தேய்ந்து, கொல்லும் காளைகளின் கொம்புகள் போல் உள்ளன. கேடயங்கள் அம்புகளால் குத்தப்பட்டதால் அவற்றில் துளைகள் தோன்றி உள்ளன. அத்துளைகள், தவறாமல் அம்பு எய்வதற்கு ஏற்ற இலக்குகள் போல் காட்சி அளிக்கின்றன !

குதிரைகள், பகைவரைப் போரில் வெல்லும் பொழுது, வாயின் இடப்புறமும் வலப்புறமும் கடிவாளத்தால் இழுக்கப்பட்டதால் சிவந்த வாய் உடையனவாய் உள்ளன. அக்குதிரைகளின் வாய்கள், மான் முதலிய விலங்குகளைக் கடித்துக் கவ்வியதால் குருதிக்கறை படிந்த புலியின் வாய் போல் உள்ளன !

யானைகள், மதிற் கதவுகளை வெகுண்டு மோதியதால் அவற்றின் வெண்ணிறமான தந்தங்கள் மழுங்கின. அந்த யானைகள் உயிரைக் கொல்லும் இயமனைப் போல் காட்சி அளிக்கின்றன !

நீ அசையும் பிடரியுடன்
விரைந்து ஓடும் குதிரைகள் பூட்டிய, பொன்னாலான தேர் மீது வருவது, பெரிய கடலிலிருந்து செஞ்ஞாயிறு எழுவதைப்போல் தோன்றுகிறது. நீ இத்தகைய வலிமையுடையவனாதலால், உன் பகைவர்கள் நாட்டு மக்கள் தாயில்லாத குழந்தைகள் போல் ஓயாது கூவி வருந்துகின்றனர் !

===============================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)11]

(28-08-2026)

================================================