விரும்பும் பதிவைத் தேடுக !

Showing posts with label இவற்குஈத்து உண்மதி. Show all posts
Showing posts with label இவற்குஈத்து உண்மதி. Show all posts

Thursday 23 December 2021

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (290) நுந்தை தந்தைக்கு இவன் தந்தை !

ஆரைக் கால்கள் போல் அம்புகள் மார்பில் பாய்ந்து !

 ----------------------------------------------------------------------------------------------

பாடலின் பின்னணி: 

---------------------------------

ஒருஅரசனின் ஆநிரைகளை (பசுக் கூட்டத்தினைமற்றொரு அரசனின் வீரர்கள் கவர்ந்து சென்றனர். ஆநிரைகளை இழந்த அரசன் அவற்றை மீட்பதற்காகக் கரந்தை மலர் சூடிப் போர் நடத்த விரும்பினான். அவன் தன் நாட்டிலுள்ள வீரர்களைப் போருக்கு வருமாறு அழைத்தான். அரசனின் அழைப்பிற்கிணங்கிவீரர்கள் பலரும் ஒன்று கூடினர். போருக்குப் போகுமுன் அரசன் வீரர்களுக்கு விருந்தளித்துஅவர்களின் வீரச் செயல்களைப் புகழ்வது வழக்கம். அவ்விருந்தில்ஒளவையாரும் கலந்துகொண்டார். 

 

வீரர்களைப் புகழும் பணியை ஒளவையார் மேற்கொண்டார். ஒரு வீரனின் குடிப்பெருமையைக் கூற விரும்பிய ஒளவையார், “அரசேஇவன் பாட்டன் உன் பாட்டனின் உயிரைக் காப்பதற்காகவண்டியின் குடத்தில் ஆரக்கால்கள் போல் தன் உடல் முழுதும் வேல்கள் பாய்ந்து இறந்தான். இவனும்தன் பாட்டனைப்போல்உன்னை மழையிலிருந்து காக்கும் பனையோலைக் குடைபோலக் காப்பான்.” என்று கூறுவதை இப்பாடலில் காணலாம்.

----------------------------------------------------------------------------------------------

புறநானூறுபாடல்.290.

-----------------------------------------------------------------------------------------------

இவற்குஈத்து உண்மதி கள்ளேசினப்போர்   (01)
இனக்களிற்று யானைஇயல்தேர்க் குருசில்!
நுந்தை தந்தைக்கு இவன்தந்தை தந்தை,
எடுத்துஎறி ஞாட்பின் இமையான்தச்சன்
அடுத்துஎறி குறட்டின்நின்று மாய்ந் தனனே: (05)
மறப்புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும்
உறைப்புழி ஓலை போல,
மறைக்குவன் பெருமநிற் குறித்துவரு வேலே. (08)
----------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------

வரி.(01) இவற்கு = இவனுக்கு ஈத்து = கொடுத்து ; உண்மதி = உண்பாயாக ;மதி – அசைச்சொல் ;  சினப்போர் = சினம் கொண்டு போரில் ஈடுபடல்

வரி.(02) இனக் களிற்று யானை = யானைக் கூட்டம் ( படை); இயல் தேர் = புதிதாகச் செய்யப்பட்ட தேர் ;  குருசில் = மன்னன் ;

வரி.(03). நுந்தை = உன் தந்தை ; தந்தைக்கு = (உன் தாத்தாவுக்கு) ; இவன் தந்தை = இவனுடைய தந்தைக்கு ; தந்தை = (இவன் தாத்தா) ;

வரி.(04). ஞாட்பின் = போர்க்களத்தில் ; எடுத்து எறி = பகைவர்கள் உன் பாட்டனை நோக்கி வீசிய  வேல்களை ;  இமையான் =  கண் இமைக்காமல் இவன் பாட்டன் தாங்கிக் கொண்டான்; தச்சன் = மரக் கலைஞன்

வரி.(05). அடுத்து எறி குறட்டின் = வண்டிச் சக்கரத்தின் குடத்தில் செருகி வைத்திருக்கும்  ஆரக் கால்கள் போல ; நின்று = வேல்களைத் தன் மார்பில் தாங்கி நின்று ; மாய்ந்தனனே = இறந்து போனான்.

வரி.(06). மறப்புகழ் = வீரத்தினால் விளைந்த புகழ் ; நிறைந்த மைந்தினோன் = நிரம்பப் பெற்றுள்ள வீரனாகிய ; இவனும் = இந்த படை வீரனும் ;

வரி.(07). உறைப்புழி =  மழை பெய்யும் பொழுது ; ஓலை போல = அதனின்று நம்மைப் பாதுகாக்கும் ஓலைக் குடை போல ;

வரி.(08). மறைக்குவன் = மறைத்து நிற்பான் ; பெரும = மன்னனே ;  நிற்குறித்து = உன்னை நோக்கி ; வருவேலே = வருகின்ற வேல்களை !

-------------------------------------------------------------------------------------

பொருளுரை:

-------------------------

அரசேமுதலில் கள்ளை இவனுக்கு அளித்து பின்னர் நீ உண்பாயாக; சினத்துடன் போர் செய்யும், யானைகளையும், நன்கு செய்யப்பட்ட தேர்களையும் உடைய தலைவனே ! உன் பாட்டனை நோக்கிப் பகைவர்கள் எறிந்த வேல்களைக் கண் இமைக்காமல் இவன் பாட்டன் தாங்கிக் கொண்டான் ! தச்சனால் வண்டியின் குடத்தில் செருகப்பட்ட ஆரக் கால்கள் போல் அவன் காட்சியளித்து இறந்தான் ! வீரத்துடன் போர் செய்து புகழ்பெற்ற வலிமையுடைய இவன், மழை பெய்யும் பொழுது நம்மை அதனின்று காக்கும் பனையோலையால் செய்யப்பட்ட குடை போல் உன்னை நோக்கி வரும் வேல்களைத் தாங்கி உன்னைக் காப்பான்” !

--------------------------------------------------------------------------------------------
காலக் கண்ணாடி:

-------------------------------

இப்பாடலிலிருந்து நாம் வரலாற்றுச் செய்திகள் சிலவற்றையும் தெரிந்துகொள்ள முடிகிறது !

 

(01)பண்டைத் தமிழர்கள்  சக்கரத்தின்  பயன்பாட்டைக் கண்டு பிடித்தவர்கள் என்பது, வண்டிக் குடத்தில் ஆரக் கால்களைச் செருகுதல்  என்னும் உவமையினாலும் தேர்ப்படையை வைத்திருந்தர்கள் என்னும் செய்தியினாலும்  தெரியவருகிறது !

(02)உடல் வலிமைக்காகப் பண்டைத் தமிழ்ப் படைவீரர்கள்  கள் உண்டார்கள் என்பது இப்பாடலின் கருத்தின் மூலம் விளங்குகிறது. இக்காலத்தைப் போல் மயக்க உணர்வுக்காக (போதை) கண்ட்தையும் அவர்கள்  அருந்தவில்லை !

 

புறநானூறு என்பது பண்டைய தமிழகத்தின் வளத்தையும் மாண்பையும் உணர்த்தும் காலக் கண்ணாடியாகத் திகழ்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை !


ஆக்கம் + இடுகை:

 வை.வேதரெத்தினம்,

 ஆட்சியர்,

 தமிழ்ப் பணி மன்றம்.

 [தி.: 2050, மீனம், 08]

 {22-03-2019)

 ----------------------------------------------------------------------------------------------