விரும்பும் பதிவைத் தேடுக !

Tuesday 3 May 2022

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (351) படுமணி மருங்கின பணைத்தாள் யானை !

இளவரசியை மணக்காமல் இவர்கள் அமைதி கொள்ளப் போவதில்லை !

-------------------------------------------------------------------------------------

பாடலின் பின்னணி : 

--------------------------------

குறுநில மன்னன் ஒருவனின் மகளை மணந்துகொள்ள அண்டை நாட்டு மன்னர்கள் சிலர் விரும்புகின்றனர். ஆனால் மகளைப் பெற்ற மன்னன் அவர்களில் யாருக்கும் அவளை மணம் செய்துகொடுக்க விரும்பவில்லை.  எப்படியும் இளவரசியை அடைந்தே தீருவது என்னும் கருத்துடன் அண்டை நாட்டு மன்னர்கள் தங்கள் படைகளுடன் இவன் நாட்டுக்கு வருகின்றனர். இவனது கோட்டைக்கு வெளியே அவர்களது  படைகள் அணி வகுத்து நிற்கும் ஆரவாரம் கேட்கிறது !


இந்தச் சூழ்நிலையைக் கண்ணுற்ற படைமங்க மன்னியார் என்னும் புலவர்,  இளவரசியை மணம் செய்து கொடுக்க  மன்னனோ உடன்படவில்லை; வந்திருக்கும் மன்னர்களோ அவளை அடையாமல் திரும்பப் போவதில்லை. போர் மூளுமோ ?  அழகிய வளம் பொருந்திய இந்த நல்லூர் இனி என்னவாகுமோ என்று வருந்துகிறார்  புலவர் !  இதோ அந்தப் பாடல்:--

 

--------------------------------------------------------------------------------------

 

படுமணி மருங்கின பணைத்தாள் யானையும் 

கொடிநுடங்கு மிசைய தேரும் மாவும்

படையமை மறவரொடு துவன்றிக் கல்லெனக்

கடல்கண் டன்ன கண்ணகன் தானை

வென்றெறி முரசின் வேந்தர் என்றும் (05)

 

வண்கை எயினன் வாகை அன்ன 

இவள்நலம் தாராது அமைகுவர் அல்லர்;

என்னா வதுகொல் தானே; தெண்ணீர்ப்

பொய்கை மேய்ந்த செவ்வரி நாரை

தேங்கொள் மருதின் பூஞ்சினை முனையின் (10)

 

காமரு காஞ்சித் துஞ்சும்

ஏமம்சால் சிறப்பினிப் பணைநல் லூரே ! (12)

 

--------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

----------------------------------------

வரி.(01). படுமணி = ஒலிக்கும் மணி ; மருங்கு = யானையின் விலாப் பக்கம் ; பணைத் தாள் = பருத்த கால் ;

வரி.(02). கொடி நுடங்கு = கட்டப்பட்ட கொடி அசைய ; மிசை = மேல் ; தேரும் = தேர்ப்படையும் ; மாவும் = குதிரைகளும் ;

வரி.(03) படையமை மறவரொடு = படை வீரர்களோடு ; துவன்றி = நெருக்கமாக ; கல்லென = சேர்ந்து ஒலியெழுப்ப

வரி.(04). கடல் கண்டன்ன = கடல் போன்ற ; கண் அகன் தானை = பரந்து விரிந்த படைகள் ;

வரி.(05) வென்று எறி முரசின் = வெற்றி முரசு கொட்டுகின்ற; வேந்தர் = அண்டை நாட்டு மன்னர்கள்

வரி.(06) வண்கை எயினன் வாகை அன்ன = வள்ளல் எயினனது வாகை என்னும் ஊரைப் போன்ற செழுமை பொருந்திய ;

வரி.(07) இவள் நலம் தாராது = இவளைத் திருமணம் செய்யாது ; அமைகுவர் அல்லர் = ஓயமாட்டார்கள்.

வரி.(08) என்னாவது கொல் தானே = என்ன நடக்குமோ தெரியவில்லை ; தெண்ணீர் = தெளிந்த நீரையுடைய  ;

வரி.(09) பொய்கை மேய்ந்த செவ்வரி நாரை = குளத்து மீன்களைப் பிடித்து உண்ட நாரைகள் ;

வரி.(10) தேங்கொள் மருதின் = தேன்மலர் நிறைந்த மருத மரத்து ; பூஞ்சினை முனையின் = பூஞ்கிளைகள் வேண்டாமென வெறுத்து ;

வரி.(11) காமரு காஞ்சித் துஞ்சும் = அழகிய காஞ்சி மரத்தின் கிளைகளுக்குச் சென்று அமர்ந்து அமைதியாக உறங்கும் ;

வரி.(12)  ஏமம் சால் = பாதுகாப்பு நிறைந்த ; சிறப்பின் = சிறப்புடைய ; பணை நல்லூரே = மருத நிலம் நிறைந்த இந்த நல்லூர். (இனி என்னவாகுமோ ?)

 

--------------------------------------------------------------------------------------

பொருளுரை:

----------------------

முதுகின் இருபுறமும் மணிகள் தொங்கவிடப்பட்டு ஒலியெழுப்ப, பருத்த கால்களையுடைய யானைகள்  இந்தக் கூட்டத்தில் காணப்படுகின்றன. கொடிகள் கட்டப்பட்ட தேர்ப்படைகள் இருக்கின்றன. விரைந்து நடைபோடும் குதிரைகளும், படைவீரர்களும் காணப்படுகின்றனர். இத்தகைய கடல் போன்ற பெரிய படையுடன் வெற்றிமுரசு கொட்டும் வேந்தர்கள் சிலர் இவளைத் திருமணம் செய்துகொள்ள வந்துள்ளனர் !

 

மகளைப் பெற்ற இந்த நாட்டு மன்னனோ அவர்கள் விருப்பத்திற்கு உடன்படவில்லை. ஆனால், முப்படைகளுடன் வந்துள்ள அண்டை நாட்டு மன்னர்கள் இவளை அடையாது திரும்ப மாட்டார்கள். போர் உறுதியாக நடக்கும் என்று தான் தோன்றுகிறது !

 

வளம் மிக்க இந்த நாட்டில், பொய்கையில் துள்ளித் திரியும் மீன்களைப் பிடித்து உண்டுவிட்டு நாரைகள் எல்லாம் மருத மரக் கிளைகளில் தங்காமல் காஞ்சி மரம் தான் தமக்குப் பாதுகாப்பானது என்று கருதி அதன் கிளைகளில் சென்றமர்ந்து இளைப்பாறுகின்றன. போர் மூண்டுவிட்டால் இந்த நாரைகள் இனி எங்கு செல்லும் ? இந்த வளநாடும் இனி என்னவாகும் ?

-------------------------------------------------------------------------------------

காலக் கண்ணாடி:

 ------------------------------

இப்பாடலிலிருந்து நாம் வரலாற்றுச் செய்திகள் சிலவற்றையும் தெரிந்துகொள்ள முடிகிறது !

 

(01)இக்காலத்தில் இருப்பது போல், அக்காலத்திலும் திருமணத்திற்குப் பெண் கேட்டுச் செல்லும் வழக்கம் நடைமுறையில் இருந்திருக்கிறது !

 

(02)பெண் கேட்பவர்களின் தகுதியைப் பார்த்து அவர்கள் கோரிக்கையை ஏற்பதும் அல்லது மறுப்பதும் வழக்கில் இருந்திருக்கிறது !

 

(03)பண்டைத் தமிழகம்  நீர்வளம் மிக்கதாக இருந்திருக்கிறது. பொய்கையில் மேய்ந்த நாரைகள் காஞ்சி மரக் கிளையில் துஞ்சிய செய்தி இதை உறுதிப் படுத்துகிறது !

 

(04)நீர்வளம் மிகுந்திருந்தால், நிலவளமும் மிகுந்திருக்கும். ஆகையால் பண்டைத் தமிழகம் நிலவளம் மிக்கதாகவும் இருந்திருக்கிறது !

 

புறநானூறு என்பது பண்டைய தமிழகத்தின் வளத்தையும் மாண்பையும் உணர்த்தும் காலக் கண்ணாடியாகத் திகழ்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை !

 

--------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

“புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 20]

{03-05-2020}

--------------------------------------------------------------------------------------