விரும்பும் பதிவைத் தேடுக !

Showing posts with label அற்றைத் திங்கள். Show all posts
Showing posts with label அற்றைத் திங்கள். Show all posts

Tuesday 14 December 2021

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (112) அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் !

இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவில் !

 ------------------------------------------------------------------------------------

  பாடலின் பின்னணி : 

 பாரி இறந்த பின்னர்,  அவரது இரு மகளிரையும் கபிலர்

 பாதுகாப்பான  இடத்தில் தங்க வைத்து  

அவர்களைக் காப்பாற்றி

 வந்தார். பாரி இறந்து ஒரு மாதம் ஆகிய பிறகு, ஒரு நாள

 முழு நிலவில் அவர்களுக்குத் தங்கள் தந்தையின்  

 நினைவும் நாட்டின் நினைவும் வந்து 

அவர்களை வாட்டியது. 

 அம்மகளிர் தம் மனவருத்தத்தை இப்பாடலில் வெளிப்  

 படுத்துகிறார்கள் !

 

--------------------------------------------------------------------------------------

புறநானூறு.பாடல்.112.

--------------------------------------------------------------------------------------

அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்

எந்தையும் உடையேம்எம் குன்றும் பிறர்கொளார்;

இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்

வென்றுஎறி முரசின் வேந்தர்எம்

குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே!


----------------------------------------------------------------------------------

பாடலின் பொருள்: 

----------------------------

 

ஒரு மாதத்திற்கு முன்பு, நிறைமதி நீலவானில் ஓளிவீசிக் 

 கொண்டிருந்த அந்த 

 நாளில் நாங்கள் எங்கள் தந்தையைப் 

 பெற்றிருந்தோம்; எங்கள் 

 ஆட்சிக்குரிய 

 (பறம்பு) மலையும்  எங்களிடம்  இருந்தது. அதேபோல், இன்றும் 

 நிறைமதி 

 நீலவானில் உலா வந்து கொண்டிருக்கிறது. ஆனால், 

 இந்நாளில் 

எம் 

 தந்தையும் இல்லை; எம் மலையும் எம்மிடம் இல்லை !

 போரில் வென்ற வேந்தர்கள் 

 எங்கள் மலையைக் கவர்ந்து 

 கொண்டனர்; 

 நாங்கள் எங்கள் தந்தையை இழந்து நிற்கிறோம் !

 

------------------------------------------------------------------------------------


சிறப்புக் குறிப்பு: 

-------------------------

 மூவேந்தர்களும் பாரியைப் போரில் வெல்ல

 முடியவில்லை. 

 ஆனால், அவர்கள் 

 அவனை சூழ்ச்சியால் வென்றனர்.

 வென்றெறி முரசின் வேந்தர் என்பது 

 மூவேந்தர்களும் தங்கள் வீரத்தால் பாரியை

 வெல்லவில்லை என்பதைச் 

 சுட்டிக் காட்டும் இகழ்ச்சிக் குறிப்பு.

--------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

“புறநானூறு” வலைப்பூ,

[தி.ஆ: 2052, நளி (கார்த்திகை) 28]

{14-12-2021}

-------------------------------------------------------------------------------------