விரும்பும் பதிவைத் தேடுக !

Showing posts with label பொன்னும் துகிரும். Show all posts
Showing posts with label பொன்னும் துகிரும். Show all posts

Wednesday 4 May 2022

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (218) பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய !

எங்கோ பிறக்கும் ஒளிமணிகள் தங்கத்துடன் சேர்ந்து அணிகலனாக மாறும் போது பெரும் மதிப்பைப் பெறுகிறது !

-------------------------------------------------------------------------------------

பாடலின் பின்னணி:

-----------------------------------

கோப்பெருஞ் சோழன், பிசிராந்தையார் இருவரும் ஒருவரையொருவர் நேரில் பாராமலேயே நட்புப் பூண்டிருந்தனர். தான் பெற்ற  மக்களால் ஏற்பட்ட மனவருத்தத்தில் உயிரை மாய்த்துகொள்ள  எண்ணி உண்ணாமல் உறங்காமல் வடக்கு நோக்கி அமர்ந்திருந்தான் கோப்பெருஞ் சோழன். அவனைக் காண பிசிராந்தையார் வந்தார். சோழனின் நிலையை எண்ணி வருந்தி அவரும் வடக்கிருந்து மன்னனுடனேயே உயிரைத் துறந்தார். நட்பால் இணைந்தவர்கள் இறப்பிலும் ஒன்றிணைந்தார்கள் !

 

இந்த நிகழ்வு தூண்டு கோலாக அமைய புலவர் கண்ணகனார் ஒரு பாடலைப் படைக்கிறார். இதோ அந்தப் பாடல்:--

-------------------------------------------------------------------------------------

 

பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய

மாமலை பயந்த காமரு மணியும்

இடைபடச் சேய ஆயினும் தொடைபுணர்ந்(து)

அருவிலை நன்கலம் அமைக்கும் காலை

ஒருவழித் தோன்றியாங்(கு) என்றும் சான்றோர்

சான்றோர் பாலர் ஆப

சாலார் சாலார் பாலர் ஆகுபவே.

-------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-------------------------------------

 

வரி.(01) பொன்னும் = தங்கமும் ; துகிரும் = பவளமும்

முத்தும்சிப்பி விளை நன் முத்தும்;

 

வரி.(02) மாமலை = உயர்ந்த மலை ; பயந்த = தருகின்ற

காமரு மணியும் = அழகிய மாணிக்கமும்

 

வரி.(03) இடைபட = தோன்றுகின்ற இடங்கள் ; சேய 

ஆயினும் = ஒன்றுக்கொன்று மிகத் தொலைவாயினும்

தொடை புணர்ந்துஇவற்றையெல்லாம் பதித்து;

 

வரி.(04) அருவிலை நன்கலம் = விலையுயர்ந்த அணிகலன்

செய்கையில் ;

 

வரி.(05) ஒருவழித் தோன்றியாங்கு = அனைத்தும் ஓரிடத்தில்

சேர்ந்திருப்பது போல ; என்றும் சான்றோர் = சான்றோர்கள்

எப்போதும் ;

 

வரி.(06) சான்றோர் பாலர் ஆகுப ; ஒருவரையொருவர் நாடிச்

சென்று ஒன்றிணைவார்கள்

 

வரி.(07) சாலார் சாலார் = சான்றோர் அல்லாதவர்களும்

பாலர் ஆகுபவே = ஒருவரையொருவர் நாடி 

ஒன்றிணைவார்கள்.

 

--------------------------------------------------------------------------------------

பொருளுரை:

----------------------

தங்கம் மண்ணிற்கு அடியிலிருந்து தோண்டி எடுக்கப்படுகிறது. கடலில்  உருவாகும் பவளப் பாறைகளிலிருந்து பவளம் பெறப் படுகிறது. மக்கள் விரும்பும் மாணிக்கக் கற்கள் , உயர்ந்த மலைகளில் பிறக்கின்றன. இவ்வாறாக இவை ஒவ்வொன்றும் பிறக்குமிடங்கள் மாறுபட்டவை; ஒன்றுக்கொன்று இடைவெளியும் தொலைவும் உடையவை !


ஆனால், வற்றைக்கொண்டு விலையுயர்ந்த ணிகலன்கள் செய்யும்போது, அவை அவ்வணிகலனில் பதியப்பெற்று ஒரே இடத்தில் ஒன்றாகத் தோன்றுகின்றன. அதுபோல், நல்லியல்புகள் அமைந்த  சான்றோர் தொலைவிலிருந்தாலும், ஒருவரையொருவர் நாடி ஒன்றுசேர்வர். (இதனால் பயனுண்டு). நல்லியல்புகளற்ற கீழோரும் எங்கிருந்தாலும் ஒருவரையொருவர் நாடிச் சென்று இணைந்து கொள்வார்கள். (இதனால் பயனேதுமில்லை) !

 

எனவே, நாம் முதலில் நம்மை மதிப்புமிக்க பண்புடையவர்களாக ஆக்கிக் கொண்டால், அச்சான்றாண்மை தன் இனமான சான்றோரிடம் நம்மைக்கொண்டு சேர்க்கும் என்பதே இப்பாடல் சொல்லும் கருத்து !

 

நம் வாழ்க்கைக்கு வேண்டிய மணியான ஒழுக்கங்களை, விலையுயர்ந்த மணிகளை உவமைகளாகச் சொல்லி , நமக்கு நல்வழி காட்டுகிறார் கண்ணகனார் என்னும் நல்லிசைப்புலவர் !

-------------------------------------------------------------------------------------------

 காலக் கண்ணாடி:

----------------------------------

இப்பாடலிலிருந்து நாம் வரலாற்றுச் செய்திகள் சிலவற்றையும் தெரிந்துகொள்ள முடிகிறது !

 

(01)பண்டைத் தமிழர்கள்  ஒன்பான்  (ஒன்பது) மணிகளையும் அவற்றைக் கொண்டு தங்கத்தினாலான அணிகலன்களையும் செய்வதில் வல்லவர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள் !

(02)சான்றோர்கள் தம்மையொத்த சான்றோர்களை நாடிச் சென்று அவர்களிடம் நல்லுறவு பூண்டு மக்களுக்கு நல்வழி காட்டியிருக்கிறார்கள் ! கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியிருக்கிறார்கள் !

 

புறநானூறு என்பது பண்டைய தமிழகத்தின் வளத்தையும் மாண்பையும் உணர்த்தும் காலக் கண்ணாடியாகத் திகழ்கிறது என்பது எவரும் மறுக்கமுடியாத  உண்மையாகும்!

--------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

புறநானூறுவலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 21]

{04-05-2022}

-------------------------------------------------------------------------------------