விரும்பும் பதிவைத் தேடுக !

Showing posts with label யாண்டு பலவாக நரையில. Show all posts
Showing posts with label யாண்டு பலவாக நரையில. Show all posts

Wednesday, 2 September 2026

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (191) யாண்டு பலவாக நரையில !

 

புறநானூறு (191) யாண்டு பலவாக, நரையில ஆகுதல் !


=============================

பாடியவர் :

=============================

பிசிராந்தையார், பிசிராந்தையார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர் ஆவார். இவர் பாடியனவாகச் சங்கநூல் தொகுப்பில் ஆறு பாடல்கள் உள்ளன. புறநானூற்றில் நான்கும், அகநானூற்றில் ஒன்றும், நற்றிணையில் ஒன்றுமாக இவரது பாடல்கள் இடம்பெற்றுள்ளன. நேரில் காணாமலேயே கோப்பெருஞ்சோழன் மீது பெருமதிப்பு வைத்திருந்தார். இந்த மதிப்பு   விரைவில்   இறுகிய   நட்பாக   மலர்ந்தது.   கோப்பெருஞ்சோழன் தன் பிள்ளைகள் மீது கொண்டிருந்த மன வருத்தத்தால், வடக்கிருந்த போது பிசிராந்தையாரும் அங்குச் சென்று அவனுடன் வடக்கிருந்து  உயிர் துறந்தார்.

=============================

பாடப்பட்டோர்:

=============================

எவருமிலர்.

==============================

திணை : பொதுவியல்

துறை : பொருண்மொழிக் காஞ்சி

====================================

பாடலின் பின்னணி: 

=====================================

தனக்கு அகவை முதிர்ந்தும் கூட, தன் தலைமுடி நரையின்றி இருப்பதற்கான  காரணங்களை  இப்பாடலில் பிசிராந்தையார் கூறுகின்றார் !

======================================


===============================================

புறநானூறு (191) யாண்டு பலவாக, நரையில ஆகுதல் !

===============================================

யாண்டு பலவாக, நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின்,
மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர்,
யான் கண்ட அனையர், இளையரும், வேந்தனும்
அல்லவை செய்யான், காக்க அதன்தலை 
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர், யான் வாழும் ஊரே.

===============================================

===========================

சொற்பொருள்:  

============================

யாண்டு பலவாக =  நீர் பிறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன, முதுமை அடைந்துவிட்டீர்கள் ; நரை இல ஆகுதல் =  ஆனால் தலைமுடி நரைக்கவில்லை ;  யாங்கு ஆகியர் = இஃது எப்படி உங்களால் முடிந்தது;  என வினவுதிர் ஆயின் = எனக் கேட்பீர்களாயின்  ; மாண்ட என் மனைவியோடு = சிறந்த பெண்மணியான என் மனைவியோடு ;  மக்களும் நிரம்பினர் = அறிவு நிறைந்த பிள்ளைகளும் வாய்த்தனர் ; யான் கண்ட அனையர் = நான் என்ன நினைக்கிறேனோ, அவ்வாறே நினைக்கும் ; இளையரும் = பணியாட்களும் அமைந்தனர் ; வேந்தனும் = என் நாட்டு மன்னனும் ; அல்லவை  செய்யான் = பிறருக்குத்  தீங்கு  செய்யாது ; காக்க = எம்மைப் பாதுகாக்கிறான் ;  அதன்தலை – அதற்கு மேல் ; ஆன்று அவிந்து அடங்கிய = பணிவும் அடக்கமும் கொண்ட ; கொள்கைச் சான்றோர் பலர் =  உயர்ந்த கொள்கைகளின்படி வாழும் சான்றோர்கள் பலரும் ; யான் வாழும் ஊரே = வாழ்கின்ற ஊரே நான் வாழும் ஊர் ஆகும் ; நரை இல ஆகுதல் =  அதனால்  எனக்குத் தலைமுடி நரைக்கவில்லை !

=============================

பொருளுரை:  

=============================

நீர் பிறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன, முதுமை அடைந்துவிட்டீர்கள், ஆனால் தலைமுடி நரைக்கவில்லை; இஃது எப்படி உங்களால் முடிந்தது எனக் கேட்பீர்களாயின், சொல்கிறேன்; சிறந்த பெண்மணியான என் மனைவியும், அறிவு நிறைந்த பிள்ளைகளும், எனக்கு வாய்த்திருக்கிறார்கள்.  நான் என்ன நினைக்கிறேனோ அவ்வாறே நினைக்கும் பணியாட்களும் அமைந்திருக்கின்றனர்.  என் நாட்டு மன்னனும் பிறருக்குத் தீங்கு செய்யாது  எம்மைப் பாதுகாக்கிறான்.  இவற்றுடன் பணிவும் அடக்கமும் கொண்ட உயர்ந்த கொள்கைகளின்படி வாழும் சான்றோர்கள் பலரும் வாழ்கின்ற ஊரே நான் வாழும் ஊர் ஆகும். அதனால்  எனக்குத் தலைமுடி நரைக்கவில்லை !

 ===============================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)16]

(02-09-2026)

================================================