புறநானூறு (246) பல்சான்றீரே ! பல்சான்றீரே !
பாடலின் பின்னணி !
-----------------------------------------------
பாண்டிய மன்னன் பூதப்பாண்டியன் கதுமென (திடீரென) இறந்துபோகிறான். பாண்டிய நாடே துக்கத்தில் மூழ்கியது.
அவன் மனைவியும் பட்டத்து
அரசியுமான பெருங்கோப்பெண்டு
இறந்த கணவனை எரிக்க மூட்டிய தீயில் தானும் விழுந்து சாகச்செல்கிறாள். அரசவைச் சான்றோர்களும் அமைச்சர்களும் அரசி உடன்கட்டை ஏறுவதை விரும்பவில்லை;
தன் முடிவைக் கைவிடுமாறு அரசியைத் தடுக்கின்றனர். அவர்களுக்கு மறுமொழி
கூறும் வகையில் அரசி ஒரு பாடல் வழியாகத் தன் கருத்தை எடுத்துரைக்கிறாள் ! இதோ அந்தப் பாடல்
!
--------------------------------------------------------------------------
புறநானூறு
பாடல் (246) பல் சான்றீரே ! பல்சான்றீரே !
-------------------------------------------------------------------------
பல் சான்றீரே ! பல் சான்றீரே !
'செல்க' எனச் சொல்லாது, 'ஒழிக' என விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சிப் பல் சான்றீரே !
அணில்வரிக் கொடுங்காய் வாள் போழ்ந்திட்ட
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது,
(05)
அடையிடைக் கிடந்த கைபிழி பிண்டம்,
வெள்ளெட்
சாந்தொடு, புளிப்பெய் தட்ட
வேளை
வெந்தை, வல்சி ஆக,
பரற்பெய் பள்ளிப்பாய் இன்று வதியும்
உயவல்
பெண்டிரேம்
அல்லேம்
மாதோ;
10
பெருங்காட்டுப்
பண்ணிய
கருங்கோட்டு
ஈமம்
நுமக்கு அரிதாகுக தில்ல; எமக்கெம்
பெருந்தோட் கணவன் மாய்ந்தென, அரும்பற
வள்ளித ழவிழ்ந்த
தாமரை
நள்ளிரும்
பொய்கையும்
தீயுமோ ரற்றே!
15
-----------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய
பாடல்.
----------------------------------------------------------+------
பல் சான்றீரே ! பல் சான்றீரே !
'செல்க' எனச் சொல்லாது, 'ஒழிக' என விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சிப் பல் சான்றீரே!
அணில் வரிக் கொடுங் காய் வாள் போழ்ந்திட்ட
காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது,
(05)
அடை இடைக் கிடந்த கை பிழி பிண்டம்,
வெள் எள் சாந்தொடு, புளிப் பெய்து அட்ட
வேளை வெந்தை, வல்சி ஆக,
பரல் பெய் பள்ளிப் பாய் இன்று வதியும்
உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ;
(10)
பெருங் காட்டுப் பண்ணிய கருங் கோட்டு ஈமம்
நுமக்கு அரிதாகுக தில்ல; எமக்கு எம்
பெருந் தோள் கணவன் மாய்ந்தென, அரும்பு அற
வள் இதழ் அவிழ்ந்த தாமரை
நள் இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே!
(15)
--------------------------------------------------
பாடலின் பொழிப்புரை:
--------------------------------------------------
பல்லாற்றானும்
பண்பில் மேம்பட்ட சான்றோர்களே ! இறந்த என் கணவரின் ஈமத்தீயில்
விழுந்து நானும் இறந்து போகக் கூடாது என்று சொல்லி என்னைச் சூழ்ந்துகொண்டு
தடுத்து நேரிய வழியை மறித்து நிற்கும் சான்றோரே
!
அரிந்த
வெள்ளரிக்காய் விதை போல் தோன்றும் வெள்ளை
நிறமான மணமுள்ள நெய் கலவாத பானையின் அடியில் கிடக்கும் பழைய சோற்றைக் கைப்பிடி அளவு
எடுத்து, பிழிந்து இலையில் இட்டு, வெள்ளை எள் துவையலும், புளிச்சாறு ஊற்றி வேகவைத்த
வேளைக் கீரையும் மட்டுமே
உணவாக உண்டும்,
பரப்பிய பரல்-கற்களைப் பாயாக்கிப் படுத்துக்கொண்டும், கைம்மை நோன்பு நோற்று வருந்தி
வாழும் பிற பெண்டிரைப்
போன்றவள் (உய்ய-வல்ல-பெண்டிர்) அல்லள் நான்!
எல்லாருக்கும்
இடம் கொடுக்கும் சுடுகாட்டில் கரிய கட்டைகளை அடுக்கிச்
செய்யப்பட்ட பிணப்படுக்கை உங்களுக்குத் தாங்க முடியாததாக இருக்கலாம்; பெரிய தோள்களையுடைய என் கணவர்
இறந்ததால், எனக்கு அவர் எரிந்துகொண்டிருக்கும் ஈமத் தீ சூழ்ந்த வெம்மை நிறைந்த பிணப்படுக்கையும்,
மலர்ந்த தாமரை மலர்கள் நிறைந்த குளிர்ந்த நீர் செறிந்த
பெரிய குளமும் ஒரே தன்மையதுதான்!
(ஆகையால் நான் ஈமத் தாமரைப்
பொய்கையில் குளிக்கிறேன், என்னைத் தடுக்காதீர்கள் !)
அருஞ்சொற்பொருள்.
பல் சான்றீரே பல் சான்றீரே = பல்வகையிலும் சான்றாண்மை மிக்க பெரியோர்களே; 'செல்க' எனச் சொல்லாது = அரசியார் விரும்புவது போல “உடன்கட்டை ஏறுக” எனச் சொல்லி விடை தராது; 'ஒழிக' என விலக்கும் = வேண்டாம் எனத் தடுத்து இறைஞ்சும்; பொல்லாச் சூழ்ச்சிப் பல் சான்றீரே = தவறாக முடிவெடுத்து என்னைத் தடுக்கும் சான்றாண்மை மிக்க பெரியோர்களே; அணில் வரிக் கொடுங் காய் = அணிலின் முதுகு மீது தோன்றும் வரிகள் போல; கொடுங்காய் = வளைந்த வெள்ளரிக்காய்; வாள் போழ்ந்திட்ட= வாளால் அரிந்திட்ட ;
காழ் போல் = விதைகள் போலக் காட்சியளிக்கும் ; நல் விளர் நறு நெய் தீண்டாது = நறுமணமிக்க ஆவின் நெய் சேர்க்காமல்; அடை இடைக் கிடந்த கை பிழி பிண்டம் = ஒரு கைப்பிடி பழைய சோற்றை எடுத்துப் பிழிந்து அகன்ற இலையில் வைத்து ; வெள் எள் சாந்தொடு = வெள்ளை எள்ளை அரைத்துச் செய்த துவையலுடன் ; புளிப் பெய்து = புளிச்சாறு சேர்த்து; அட்ட = வேக வைத்த; வேளை வெந்தை, வல்சி ஆக = வேளைக் கீரையை உணவாக உண்டும்; பரல் பெய் பள்ளிப் பாய் இன்று வதியும் = சிறு கற்கள் நிறைந்த பாய் விரிக்காத வெற்றுத் தரை மீது படுத்துறங்கியும் (தமது ஆற்றொணாத் துன்பத்தை வெளிப்படுத்தி); உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ = கைம்மை நோன்பு நோற்று வாழ்கின்ற ஏனைய பெண்டிரைப் போல அல்லள் நான்;
பெருங் காட்டு
= சுடுகாட்டில்; பண்ணிய
= செய்த ; கருங் கோட்டு ஈமம் = கரிய மரத்துண்டுகளை அடுக்கிச் செய்த பிணம் எரிக்கும் மேடையில்
எழுகின்ற ஈமத் தீ; நுமக்கு அரிதாகுக ; உங்களுக்கு அரிதாக இருக்கட்டும்;
உங்களைத் தீண்ட வேண்டாம்; எமக்கு = எனக்கு; எம் பெருந்தோள் கணவன் = பருத்த வலிமையான
கைகளையுடைய என் கணவனாகிய பாண்டிய மன்னன்; மாய்ந்தென = இறந்ததால்;
அரும்பு அற வள் இதழ் அவிழ்ந்த தாமரை
= மொட்டுகள் அவிழ்ந்து மலர்ந்த தாமரை மலர்கள் நிறைந்த; நள்
இரும் பொய்கையும்
= குளிர்ச்சி நிறைந்த பெரும் பொய்கை நீரும்; தீயும்
ஓரற்றே = வெம்மை மிக்க ஈமத் தீயும் ஒன்று தான்;
(ஆகையால் நான் உடன் கட்டை ஏறுகிறேன்; என்னைத் தடுக்காதீர்கள்)
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
“புறநானூறு” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2057, மேழம் (சித்திரை) 09]
{22-04-2026.}
----------------------------------------------------------------------------------
.jpg)