புறநானூறு (107) பாரி பாரி, என்று பல ஏத்தி!
=============================
பாடியவர் :
=============================
கபிலர். கபிலர் சங்க காலத்துத் தமிழ்ப் புலவர்களில் குறிப்பிடத்தக்கவர். சங்க இலக்கியப் பாடல்களுள் மிக அதிக எண்ணிக்கையில் பாடல்களை
இயற்றியவர். சங்க காலப் புலவர் கபிலரின் காலம் கி.மு 3-ஆம் நூற்றாண்டின் தொடக்க காலமாகும். இவர் இயற்றிய பாடல்களுள் மிகச்சிறந்து விளங்குவது
பத்துப்பாட்டிலுள்ள குறிஞ்சிப் பாட்டு ஆகும். இதில் குறிஞ்சி நிலத்தில் பூத்துக்
கிடந்த 99 பூக்களையும், சிறப்பாகப்
பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப் பூவையும் குறிப்பிட்டுப்
பாடியுள்ளார் !
=============================
பாடப்பட்டோன்:
=============================
வேள் பாரி.
வேள்பாரி அல்லது பாரி, பறம்பு மலையைத் தலைமை
இடமாய்க் கொண்டு ஆட்சி செய்த ஒரு குறுநில மன்னர் ஆவார். பாரி பறம்பு மலையையும்
அதனைச் சூழ்ந்த பகுதிகளையும் ஆண்டவர். பறம்புநாடு முந்நூறு (300) ஊர்களைக் கொண்டதாகும். பறம்புமலை, பிறம்பு மலை என்றாகி
இப்பொழுது “பிரான்மலை” என்று அழைக்கப்படுகிறது. திருச்சியிலிருந்து மதுரை செல்லும் வழியில் கொட்டாம்பட்டியிலிருந்து விலகிச் செல்லும் சாலையில்
கிழக்கு நோக்கிச் சென்றால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது பிரான்மலை !
=============================
திணை: பாடாண்
துறை: இயன் மொழி
=============================
=============================
பாடல் பின்னணி:
=============================
பாரியின் கொடைச்
சிறப்பைக்கூற, கபிலர் இயற்றிய பாடல் இது.
==============================
================================================
புறநானூறு (107) பாரி
பாரி, என்று பல ஏத்தி !
================================================
‘பாரி பாரி’
என்று பல ஏத்தி,
ஒருவர்ப் புகழ்வர்
செந்நாப் புலவர்,
பாரி ஒருவனும் அல்லன்,
மாரியும்
உண்டு, ஈண்டு உலகு புரப்பதுவே.
===============================================
=============================
சொற்பொருள்:
==============================
பாரி
பாரி = பாரி பாரி ; என்று பல ஏத்தி = என்று அவனது பல செயல்களைச் சொல்லி வாழ்த்தி ; ஒருவர்ப்
புகழ்வர் = ஒருவனையே பலரும் புகழ்கின்றனர்;
செந்நாப் புலவர் = தமிழில் புலமை மிக்க வல்லமை சான்ற புலவர்கள் ; ஈண்டு = இங்கே ; உலகு = இந்த உலகத்தை; புரப்பதுவே
= பாதுகாப்பதற்கு ; பாரி = வேள் பாரி; ஒருவனும் அல்லன் = ஒருவன் மட்டும் இல்லை ; மாரியும் உண்டு = வானின்று பொழிகின்ற மழையும்
உண்டு ;
=============================
பொருளுரை:
=============================
தமிழில் புலமை மிக்க
வல்லமை சான்ற புலவர்கள் எல்லாம் “பாரி”
என்னும் ஒருவனைப் பற்றியே,
அவனது கொடைத் திறச் செயல்களைச்
சொல்லி வாழ்த்திப் புகழ்கின்றனர்; ஆனால் இந்த
உலகைத் தனது கொடைத் திறத்தால் பாதுகாக்க, இங்கே பாரி ஒருவன் மட்டும் இல்லை, வானின்று பொழியும் மழையும் உண்டு என்பதை அறியுங்கள் !
இப்பாடலில் கபிலர்
பாரியைத் தாழ்த்திப் பேசவில்லை. கைம்மாறு கருதாமல் உலக மக்களுக்கு நீர் வளத்தை அளித்து,
அவர்களைப் பாதுகாப்பது மழை. அதைப் போல் கைம்மாறு கருதாமல் புலவர்க்கும் வறியோர்க்கும்
அள்ளி அள்ளிக் கொடுத்து அவர்களைக் பாதுகாத்து வரும் பரிவுள்ளம் கொண்டவன் பாரி என்று அவனைப் புகழ்கிறார்
! ஒருவரைத் தாழ்த்துவது போல் தொடங்கி உயர்த்திப் பேசுவது வஞ்சப்புகழ்ச்சி எனப்படும்.
அந்த உத்தியைத் தான் கபிலர் இங்கு கையாள்கிறார் !
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
“புறநானூறு” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)14]
(01-09-2026)
================================================ 
பிரான்மலை எனப்படும் பறம்பு மலை