புறநானூறு – பாடல் (01) இறைவணக்கப் பாடல் !
=======================
பாடியோர்
=======================
புறப்பொருள் பற்றிப்
பல்வேறு புலவர்களால் வெவ்வேறு காலங்களில் பாடப்பெற்ற நானூறு பாடல்களைக் கொண்ட நூல்
புறநானூறு ! புறநானூற்றுப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை மொத்தம் நூற்று
ஐம்பத்து ஆறு என்பது நூலைஆய்வு செய்கையில் வெள்ளிடை மலையாக விளங்குகிறது ! புறநானூற்றுப்
பாடல்களை ஒரே நூலாகத் தொகுத்த காலத்தில் அதில்
கடவுள் வாழ்த்துப் பாடலை முதற்பாடலாக இணைத்தவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்று சொல்லப்படுகிறது
!
=========================
பாடப்பட்டோன்
=========================
இறைவணக்கப் பாடல் மூலம் பாடப்பட்ட இறைவன் சிவபெருமான். ”முக்கண் செல்வர் நகர் வலஞ்செயற்கே இறைஞ்சுக” என்று 6-ஆம் பாடலிலும், “மூவெயில் உடற்றிப் பெருவிறல் அமரர்க்கு வென்றி தந்த கறை மிடற்று அண்ணல்” என்று 55-ஆம் பாடலிலும், ”நீலமணி மிடற்று ஒருவன்” என்று 91 -ஆம் பாடலிலும், சிவபெருமானைப்பற்றிப் புலவர்கள் பாடி இருப்பதிலிருந்து, பெருந்தேவனாரும் அவர்களைப் பின்பற்றி, இறைவணக்கப் பாடலில் சிவபெருமானைப் போற்றிப் பாடியிருக்கிறார் என்று கருதலாம் !
புறநானூறு – பாடல் (01) கண்ணி கார்நறுங் கொன்றை !
-----------------------------------------------------------------------------------
கண்ணி கார்நறுங்
கொன்றை, காமர்
வண்ண மார்பின் தாருங் கொன்றை;
ஊர்தி வால்வெள் ஏறே, சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்ஏறு என்ப;
கறைமிடறு அணியலும் அணிந்தன்று, அக்கறை
மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே;
பெண்ணுரு ஒருதிறன் ஆகின்று, அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;
பிறைநுதல் வண்ணம் ஆகின்று, அப்பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே;
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய
நீரறவு அறியாக் கரகத்துத்
தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே !
=================================
சந்தி பிரித்து எழுதிய பாடல்
=================================
கண்ணி கார் நறும்
கொன்றை, காமர்
வண்ண மார்பின் தாரும் கொன்றை;
ஊர்தி வால் வெள் ஏறே, சிறந்த
சீர் கெழு கொடியும் அவ் ஏறு என்ப;
கறை மிடறு அணியலும் அணிந்தன்று, அக்கறை
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே;
பெண் உரு ஒரு திறன் ஆகின்று, அவ் உருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;
பிறை நுதல் வண்ணம் ஆகின்று, அப்பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே;
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய
நீர் அறவு அறியாக் கரகத்துத்
தாழ் சடைப் பொலிந்த அரும் தவத்தோற்கே !
==========================
பாடலின் பொருள்
==========================
கையில் கமண்டலமும் தலையில் சடைமுடியும் கொண்ட சிவபெருமான், தன் தலையிலும் மார்பிலும் கொன்றை மாலை அணிந்திருப்பவன். அவன் ஏறிச் செல்லும் ஊர்தி (வாகனம்) தூய வெண்ணிறமுள்ள காளை; அவனுடைய கொடியும் காளைக்கொடிதான். திருப்பாற்கடலைக் கடைந்தபோது வாசுகி என்னும் அரவம் கக்கிய நஞ்சினைத் திரட்டி உண்கையில் கழுத்தில் தங்கிவிட்ட நஞ்சின் கருமை நிறம் கூட சிவனுக்கு அழகு செய்கிறது. வேதம் ஓதும் மாந்தர் அக் கறையையும் போற்றிப் புகழ்கின்றனர். தன் உடலில் ஒருபாதியை உமையம்மைக்குத் தந்தவன். உமையுருவை அவன் தன்னுள் மறைத்துக் கொள்வதும் உண்டு. சிவபெருமானின் நெற்றிப் பிறைநிலா அவன் நெற்றிக்கு அழகு சேர்க்கிறது. அப்பிறையைத் தேவர், அசுரர், முனிவர், கின்னரர், கிம்புருடர், போன்ற பதினெட்டுக் கணத்தினரும் போற்றிப் புகழவும் செய்கின்றனர். இத்தகைய சிவபெருமான் அனைத்து உயிர்களையும் புரந்து பாதுகாக்கும் அருளாளன்! அவனைப் பாதம் பணிந்து வணங்குவோம் !
============================
அருஞ்சொற்பொருள்.
============================
கண்ணி = தலையில் சூடப்படும் மாலை; கார் = கார் காலம்; நறுமை = மணம்; கொன்றை = கொன்றை மலர்; காமர் = அழகு. தார் = மாலை. ஊர்தி = வாகனம்; வால் = தூய; ஏறு = எருது. சீர் = அழகு; கெழு = பொருந்து. கறை = கறுப்பு; மிடறு = கழுத்து. அணியல் = மாலை; அணிந்தன்று = அழகு செய்தது; நவிலுதல் = கற்றல்; நுவலுதல் = போற்றுதல். திறன் = கூறுபாடு. ஆகின்று = ஆகியது; கரக்கும் = மறைத்தல். வண்ணம் = அழகு. ஆகின்று = ஆகியது; பதினெண் கணனும்= தேவர், அசுரர், முனிவர், கின்னரர், கிம்புருடர், கருடர், இயக்கர், இராக்கதர், கந்தருவர், சித்தர், சாரணர், வித்தியாதரர், நாகர், பூதம், வேதாளம், தாரகணம்,ஆகாசவாசி, போகபூமியர் ஆகியப் 18 திறத்தாராலும்; ஏத்தவும்படும் = புகழப்படும். ஏமம் = காவல். நீர் அறவு = நீர் குறைதல்; அறியாக் கரகம் = ஏற்படாத கமண்டலம். தாழ்சடை = நீண்டு வளர்ந்த சடைமுடி; பொலிந்த = சிறந்த; அருந்தவத்தோன் = அரிய தவம் செய்யும் சிவபெருமான் ஆகிய (இறைவன்).
=================================================
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
“புறநானூறு”
வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு;
2057, மடங்கல்(ஆவணி)04]
(21-08-2026)
==================================================