விரும்பும் பதிவைத் தேடுக !

Showing posts with label நாடா கொன்றோ. Show all posts
Showing posts with label நாடா கொன்றோ. Show all posts

Tuesday, 1 September 2026

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) பாடல் (187) நாடா கொன்றோ, காடா !


புறநானூறு (187) நாடாக ஒன்றோ, காடாக ஒன்றோ !

=============================

 பாடியவர் :

=============================

ஔவையார்.  ஔவையார் என்னும் பெயரில் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பெண்பாற் புலவர்கள் வாழ்ந்துள்ளனர். இந்த ஔவையார் சங்ககாலப் புலவர். எட்டுத்தொகையில் உள்ள புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நான்கு நூல்களில் இவரது பாடல்கள் 59  எண் உள்ளன.

============================

பாடப்பட்டோர் :

============================

எவருமிலர்.

============================

திணை : பொதுவியல்

துறை  :பொருண்மொழிக் காஞ்சி

============================

பாடலின் பின்னணி:  

============================

நாட்டின் இயல்பு அங்கு வாழும் மக்களின் இயல்பைப் பொருத்தது என்ற கருத்தை இப்பாடலில் ஔவையார் கூறுகின்றார்.

===============================================

புறநானூறு (187) நாடாக ஒன்றோ, காடாக ஒன்றோ !

===============================================

நாடாக ஒன்றோ, காடாக ஒன்றோ,
அவலாக ஒன்றோ, மிசையாக ஒன்றோ,
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை வாழிய நிலனே.

===========================

சந்தி பிரித்து எழுதிய பாடல்

===========================

நாடாக ஒன்றோ ; காடாக ஒன்றோ,

அவலாக ஒன்றோ ; மிசையாக ஒன்றோ,

எவ்வழி நல்லவர் ஆடவர்,

அவ்வழி நல்லை; வாழிய நிலனே !

==============================

சொற்பொருள்: 

==============================

நாடாக ஒன்றோ = நாடு என்ற ஒன்றாகவும் ; காடாக ஒன்றோ = காடு என்ற ஒன்றாகவும் ; அவலாக ஒன்றோ = பள்ளம் என்ற ஒன்றாகவும் ;  மிசையாக ஒன்றோ = மேடு என்ற ஒன்றாகவும் ; எவ்வழி = இந்த நிலம் எவ்வாறு இருந்தாலும் ;  ஆடவர் = அங்கு வாழும் ஆண்கள் ; நல்லவர் = நல்லவர்களாக இருந்தால் ; நிலமே அவ்வழி = நிலமே நீயும் அவ்வழியில் ; நல்லை =ல்ல நிலமாக இருப்பாய்  ;  நிலனே  வாழிய = நிலமே நீ வாழ்வாயாக !

 

=============================

பொருளுரை:  

=============================

நிலமே !  நீ நாடாகவோ, காடாகவோ, பள்ளமாகவோ அல்லது மேடாகவோ, எப்படி இருந்தாலும், அங்கு வாழும் ஆண்கள் நல்லவர்களாக இருந்தால் நீயும் நல்ல நிலமாக இருப்பாய் !  நீ வாழ்க!

 

ஆடவர்கள்தானே காடாகவோ, மேடாகவோ, பள்ளமாகவோ உள்ள நிலத்தைத் திருத்திப் பண்படுத்தி, வளப்படுத்தி வேளாண்மை செய்யத் தக்கதாக மாற்றுகிறார்கள். ஆகையால் ஆடவர்கள் உயர்ந்த எண்ணம் படைத்த உழைப்பாளிகளாக இருந்தால் எந்த நிலமும் நல்ல நலமாக இருக்கும் என்பதை ஔவையார் சுட்டிக் காட்டுகிறார் !

 ===============================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)15]

(01-09-2026)

================================================ 

மேடும் பள்ளமும்