விரும்பும் பதிவைத் தேடுக !

Saturday, 29 August 2026

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (75) மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் !

 

புறநானூறு .(75).மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் !

 

 ==============================

பாடியவர்:

===============================

சோழன் நலங்கிள்ளி,  சோழன் நலங்கிள்ளி கரிகாலனின் மகன் என்பதே இவனைப்பற்றிய பாடல்களால் உய்த்துணரப் படுகிறது. இவன் பெரியதொரு நாட்டைப் பகைவர் அஞ்ச ஆண்டுவந்தான் என்றே புலவர்கள் கூறியுள்ளனர். இவன் பலவகைப் படைகளைப் பெற்றிருந்தான். இவனைப் பற்றிப் 10 பாடல்கள் புறநானூற்றில் உள்ளன. இவனால் பாராட்டப் பெற்ற சங்கப்புலவர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார், கோவூர் கிழார், ஆலந்தூர் கிழார் என்பவர்கள். இப்புலவர் பாடல்களால் இவன் வரலாறு விளங்குகிறது !

 

==============================

பாடப்பட்டோர்

==============================

எவருமிலர் !

 

====================================

திணை: பொதுவியல், 

துறை: முதுமொழிக் காஞ்சி

=====================================

==============================================

புறநானூறு (75) மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் !

==============================================

 

மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்
பால் தர வந்த பழ விறல் தாயம்
எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்பு என
குடி புரவு இரக்கும் கூரில் ஆண்மைச்
சிறியோன் பெறின், அது சிறந்தன்று மன்னே, 
மண்டு அமர்ப் பரிக்கும் மதனுடை நோன் தாள்
விழுமியோன் பெறுகுவன் ஆயின், தாழ் நீர்
அறு கய மருங்கின் சிறு கோல் வெண்கிடை
என்றூழ் வாடு வறல் போல, நன்றும்
நொய்தால் அம்ம தானே, மையற்று 
விசும்புற ஓங்கிய வெண்குடை
முரசு கெழு வேந்தர் அரசு கெழு திருவே.

 

==============================

பொருளுரை:   

==============================

 

தன் குடியில் உள்ள மூத்தவர்களைக் கூற்றுவன் கொண்டு சென்றதால் -அவர்கள் இறந்துவிட்டதால் -  முறைப்படி வந்த, தன் அரச உரிமையை அடைந்து இப்பெரும் சிறப்பைத் தான் பெற்றிருக்கிறேன் என்று எண்ணி குடிமக்களிடம்  வரி கேட்கும் ஆண்மையும்  நெஞ்சுரமும் இல்லாத ஒருவனாக  இருந்தால், அது சிறப்பானது அன்று. அந்த அரச உரிமை அவனுக்குச் சுமை மிக்கதாகவே இருக்கும் !

 

களத்தில் துணிந்து போரிடும் மன எழுச்சியும் வலுவான முயற்சியும் உடைய ஓர் உயர்ந்த ஆண்மகன், அரச உரிமையைப் பெறுவான் எனில், தனது ஆட்சி முறைமை என்னும் வெண்கொற்றக்குடை, வற்றிய குளத்தில் கிடக்கும் உலர்ந்த சிறிய எடை இல்லாத நெட்டிச் சுள்ளியைப் போல் அவனுக்குச் சுமை இல்லாததாக, எளிமையானதாக இருக்கும்.  குற்றம் இல்லாத, அரசாட்சிதான் ஒரு மன்னனுக்குத் திரண்ட செல்வம் ஆகும் !

 

==============================

சொற்பொருள்:  

==============================

 

மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தென = தன்னுடைய குடியில் உள்ள மூத்தவர்களைக் கூற்றுவன் கொண்டு சென்றதால் (அவர்கள் இறந்துவிட்டதால்) ;  பால் தர = ஊழ்வினையின் பயனாக ;  வந்த = தம்மிடம் வந்து சேர்ந்த  ; பழ விறல்  = பழைய வெற்றிகளால் ; தாயம் எய்தினம் ஆயின்  = நாட்டின் ஆட்சி உரிமையை ஒருவன் அடைந்தான் எனில் ;

 

எய்தினம் சிறப்பு என ;  நாட்டின் தலைமைப் பொறுப்பான அரச பதவியை நான் பெற்றிருக்கிறேன் என்று ;  குடி புரவு இரக்கும்  =  குடிமக்களிடம் தெரிவித்து, அவர்கள் ஒத்துழைப்பை இறைஞ்சி வேண்டிக் கேட்கும்  ; கூரில் ஆண்மைச் சிறியோன் பெறின்  =  வீரமும்  ஆண்மையும் இல்லாத தகுதியில்லாத ஒருவன்  பெற்றால் ; அது சிறந்தன்று =  அது சிறந்த வழி  ஆகாது ;   

 

மண்டு அமர்ப் பரிக்கும் மதனுடைரை நோன் தாள் = போர்க்களத்தில்  துணிந்து நின்று போரிடும் மன எழுச்சியையும் வலுவான முயற்சியையும் ;  விழுமியோன் பெறுகுவன் ஆயின் =  ஓர் அரசன் பெறுவான் ஆயின் ;  தாழ் நீர் அறு கய மருங்கின் =  வற்றிய குளத்திடத்து  கிடக்கும் ; சிறு கோல் வெண்கிடை =  சிறிய கோல் போன்ற வெண்ணிற நெட்டி ;  என்றூழ்  =  சூரியன் சுட்டெரிக்கும் வெயிலால் ;  

 

வாடு வறல் போல =  வாடி உலர்ந்த சுள்ளியாகி ; நன்றும் நொய்தால் = எடையே இல்லாது இருப்பது போல ; தானே, மையற்று  விசும்புற ஓங்கிய வெண்குடை  = தனது ஆட்சி முறைமை என்னும் வெண்கொற்றக் குடை;  முரசு கெழு வேந்தர் =  நாட்டின் அரசனாகிய அவனுக்கு   ;  அரசு கெழு திருவே =  சுமையாக இல்லாமல் மிக எளிமையானதாக இருக்கும் !

  ===============================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)12]

(29-08-2026)

================================================

No comments:

Post a Comment