புறநானூறு – பாடல் 66. நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி !
=======================================
பாடலின் பின்னணி
=======================================
“வெண்ணி” என்னுமிடத்தில் நடைபெற்ற பெரும்போரில் சோழமன்னன் கரிகாற் பெருவளத்தான், சேரன் பெருஞ்சேரலாதனையும், வேளிர் குலத்தைச் சேர்ந்த 11 சிற்ரரசர்களையும் களத்தில் சந்தித்து வெற்றி பெறுகிறான். களத்தில் எதிரெதிரே சந்தித்த போது கரிகாலன் வீசிய வேல், சேரன் பெருஞ்சேரலாதனின் மார்பைத் துளைத்துக்கொண்டு அவன் முதுகு வழியாக வெளியேறியதால், அவன் முதுகிலும் புண் ஏற்பட்டது. முதுகுப் புண்ணைக் காண்போர், பெருஞ்சேரலாதன் போரில் புறமுதுகிட்டான் என்று இழிவாகப் பேசுவார்களே என்று கருதி, வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணாமல் உறங்காமல் உயிர்துறந்தான். இச்செய்தியை அறிந்த புலவர் வெண்ணிக் குயத்தியார், கரிகாற் பெருவளத்தானைப் பார்த்து, போரில் வீரத்தால் நீ பெரும் வெற்றிபெற்றுப் புகழ் அடைந்தாய், பெருஞ்சேரலாதன், போரில் தோற்றாலும், உன் வேல் அவன் மார்பைத் துளைத்ததுடன் முதுகிலும் புண் ஏற்படுத்தியதால் வடக்கிருந்து உயிர் துறந்து உன்னைவிடப் பெரும் புகழ் அடைந்துவிட்டான்; அவன் உன்னைவிட நல்லவன்தானே என்று கரிகாலனைக் கேட்பதன் மூலம் இப்பாடலின் மூலம் இருவரையும் உயர்த்திப் பேசுகிறார் !
=========================================
பாடியோர்
=========================================
இப்பாடலைப் பாடியவர்
வெண்ணிக் குயத்தியார் என்னும் பெண்பாற் புலவர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை
அடுத்த ஊர் “கோயில்வெண்ணி”. இவ்வூர் முற்காலத்தில்
“வெண்ணி” என்ற பெயரில் அழைக்கப் பெற்றிருக்கிறது. இவ்வூரைச் சேர்ந்த மண்பாண்டம் செய்யும்
“குயவர்” குலத்தைச் சேர்ந்தவர் இப்புலவர் என்றும், இவரது இயற்பெயர் தெரியாததால், ஊர்ப்பெயரை
முன்னொட்டாக வைத்து “வெண்ணிக் குயத்தியார்”
என அழைக்கப் படுவதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர் !
======================================
பாடப்பட்டோர்
======================================
“வெண்ணி” என்னும்
ஊரில் நடைபெற்ற பெரும்போரில், சேர மன்னன் சேரமான் பெருஞ்சேரலாதனையும், வேளிர் குலத்தைச்
சேர்ந்த 11 சிற்ரரசர்களையும் சோழன் கரிகாற்
பெருவளத்தான் வென்றான். போரில், சேரனின் மார்பில் பாய்ந்த கரிகாலனின் வேல், அவன் முதுகுவழியாக
வெளியேறியது. முதுகிலும் புண்பட்டுவிட்டதே என்று நாணமடைந்த சேரன் வடக்கிருந்து உயிர்
துறந்தான், சேரலாதன், கரிகாலன் இருவரது புகழும் இப்பாடலில் பேசப்படுகிறது !
=========================================
திணை : வாகைத் திணை
=========================================
துறை: அரச வாகை
==========================================
===============================================
புறநானூறு – (66) நளியிரு முந்நீர் நாவாய்
ஓட்டி !
===============================================
நளியிரு முந்நீர்
நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களிஇயல் யானைக் கரிகால் வளவ!
சென்றுஅமர்க் கடந்தநின் ஆற்றல் தோன்ற
வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப் புகழ் உலகம் எய்திப்
புறப்புண் நாணி, வடக் கிருந்தோனே !
===============================
பொருளுரை
===============================
கடற்காற்றின் இயல்பையும் திசையையும் அறிந்து அதற்கேற்பக் கப்பலைச்
செலுத்தும், கடற்செலவில் வல்லவர்களின் வழித் தோன்றலே ! மன்னனே ! கரிகாலனே! நீ உன் ஆற்றல்
வெளிப்படுமாறு போர்க்களத்தில் வென்றாய் ! ஆனால், உன்னிடம் தோற்ற பெருஞ்சேரலாதன் புறப்புண்ணுக்காக நாணிக் களத்திலேயே
நோன்பிருந்து உயிர் துறந்தான். அவன் உன்னை விட நல்லவன் அல்லவா ? (இருவருமே நல்லவர்களே,
வல்லவர்களே என்று பொருள்)
=============================
அருஞ்சொற்பொருள்
=============================
நளி
= குளிர்ச்சி ; இரு = பெரிய ; முந்நீர் =
கடல் ( ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர் மூன்றும் கலப்பதால் கடலுக்கு முந்நீர் என்று
பெயர்) ; நாவாய் = மரக்கலம்; கப்பல் ;
உரவோன் = வலிமையுடையவன் ; மருக = வழித்தோன்றலே
! ; களியியல் யானை = மத (வெறி) உணர்வு கொண்ட யானைப் படை ; அமர் = போர் ; கடந்த = எதிரிகளை அழித்த ; நின் ஆற்றல்
= உனது பெரும் வீரம் ; தோன்ற = வெளிப்பட ;
வென்றோய் = வெற்றி பெற்றவனே ! ; வெண்ணிப் பறந்தலை = “வெண்ணி”ப் போர்க்களத்தில் ; கலிகொள்
யாணர் = மார்பிலே அம்பை வாங்கிக்கொண்ட வீரன் பெருஞ்சேரலாதன்
; புறப்புண் நாணி = மார்பில் தைத்த வேல் முதுகிலும் புண் ஏற்படுத்திவிட்டதால், புறமுதுகு
காட்டியவன் என்று சிலர் பழிக்கக் கூடும் என்று
அஞ்சி, நாணி ; வடக்கிருந்தோன் = வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணாமல் உறங்காமல் உயிர் துறந்தவன்
; மிகப் புகழ் = மிகுந்த புகழ் ; உலகம் எய்தி = இவ்வுலகில் அடைந்துவிட்டான் ; நின்னினும் நல்லன் அன்றே = (அவன்) உன்னைவிட நல்லவன் அல்லவா ?
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
“புறநானூறு” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)07]
(24-08-2026)
================================================
No comments:
Post a Comment