புறநானூறு – பாடல் (64) புற்கை நீத்து வரலாம்!
==============================
பாடலின் பின்னணி:
==============================
வறுமையில்
வாடுகிறாள் விறலி ஒருத்தி. பாண்டியன் பல்யாகசாலை
முதுகுடுமிப் பெருவழுதியிடம் சென்றால் அவள் வறுமை தீரும் என்று சொல்லி, அவளைப் புலவர் நெடும்பல்லியத்தனார் பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதியிடம்
செல்வோம் வா என்று ஆற்றுப்படுத்துகிறார் !
==============================
பாடியவர்:
===============================
இப்பாடலைப் பாடியவர் நெடும்பல்லியத்தனார். புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றுதான். பல்லியம் என்று சொல்லுக்கு பலவகையான இசைக்கருவிகள் என்று பொருள். இவர் பல வகையான இசைக்கருவிகளை இயக்குவதில் வல்லவராக இருந்ததால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
=============================
பாடப்பட்டோன்:
=============================
இப்பாடலில் பாடப்பட்டவன்
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி. இவன் தன் பகைநாட்டைத் தாக்கும் முன் அங்கிருக்கும் ஆவினத்தையும், மகளிர் மற்றும் நோயுற்றோரையும், பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு
சென்று விடும்படி முன்னறிவிப்புத்
தருவது வழக்கம் என்று போற்றுகிறார் ஒரு
புலவர்.
=========================================
திணை : பாடாண் திணை
========================================
துறை: விரலியாற்றுப்படை
========================================
================================================
புறநானூறு – பாடல் (64) நல்யாழ் ஆகுளி பதலை !
================================================
நல்யாழ் ஆகுளி பதலையடு
சுருக்கிச்
செல்லா மோதில் சில்வளை விறலி !
களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை
விசும்புஆடு எருவை பசுந்தடி தடுப்பப்
பகைப்புலம் மரீஇய தகைப்பெருஞ் சிறப்பின்
குடுமிக் கோமாற் கண்டு
நெடுநீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே?
==============================
பொருளுரை:
==============================
வளையல்கள் அணிந்திருக்கும் விறலியே !
பகைவர் நாட்டில் யானைப் படையைப் போரில் ஈடுபடுத்திக் கடும்போரிட்டு
வெற்றி பெற்ற, முதுகுடுமிப் பெரு வழுதியின் பாசறையில், பச்சை ஊன் துண்டங்கள்
அங்கு மிங்கும் சிதறிக் கிடக்கும். அவை, வானத்தில் பறக்கும் பருந்துக் கூட்டத்தை வேறிடம்
செல்லவிடாமல் தடுத்து, தம்பால் ஈர்க்கும்.
இத்தகைய போர் வெற்றிகளையும்,
பெருஞ்செல்வத்தையும் அடைந்துள்ள முதுகுடுமிப் பெருவழுதியைச் சென்று காணலாம், அவனைக் கண்டு பரிசில் பெற்று வந்தால் அன்றாடம் கஞ்சியை மட்டுமே உண்டு வாழும் உன் வறிய வாழ்வை அறவே விட்டுவிடலாம். யாழையும் பறையையும் பதலையும்
கட்டி எடுத்துக் கொண்டு உடனே புறப்படுவாயாக !
=============================
அருஞ்சொற்பொருள்:
=============================
நல்யாழ் = நல்ல யாழ்
; ஆகுளி = சிறுபறை ; பதலை = மாக்கிணை என்னும்
பறை ; சுருக்குதல் = கட்டுதல் ; செல்லாமோ
= செல்வாயாக ; தில் = விருப்பத்தை உணர்த்தும்
அசைச்சொல் ; சில்
வளை = கைகளில் சில வளையல் அணிந்த ; விறலி
= நாட்டியப் பெண் ; களிற்றுக்கணம் = யானைக் கூட்டம்
; பொருத = மோதுகின்ற ; கண் = இடம் ; அகன்
= அகன்ற ; பறந்தலை = போர்க்களம் ; விசும்பு ஆடு = வான்
வெளியில் பறக்கும் ; எருவை = பருந்து ; பசுந்தடி
= பச்சைஊன் ;
மரீஇய = மருவிய , பொருந்திய ; குடுமிக் கோமான் = பாண்டியன் முதுகுடுமிப்
பெருவழுதி ; புற்கை = கஞ்சி,
கூழ் ; நீத்தல் = துறத்தல், விட்டுவிடுதல் ; வரற்கே = மன்னனைக் கண்டு வருவதற்கு !
================================================
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
“புறநானூறு” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)07]
(24-08-2026)
================================================