விரும்பும் பதிவைத் தேடுக !

Showing posts with label பல்சான்றீரே. Show all posts
Showing posts with label பல்சான்றீரே. Show all posts

Wednesday 22 December 2021

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை)(195) பல்சான்றீரே ! பல்சான்றீரே !


நரை திரை பரவிய  நுண்மாண் நுழைபுலச் சான்றோர்களே !

------------------------------------------------------------------------------------------------

 

இப் பாடலைப் புனைந்த நரிவெரூஉத் தலையார் காலத்துச் சான்றோர் சிலர் பரிசில் பெற வேண்டி, மன்னர்களை வீணாகப் புகழ்ந்தும், போர் புரிய ஊக்குவித்தும் தங்கள் புலமை வளத்தைத் தவறாகப் பயன்படுத்தி வந்தனர். அதைக்கண்டு வருந்திய இவர், தங்கள் சிந்தனையையும் அறிவையும் நல்வழியில் பயன்படுத்துமாறு அவர்களை அறிவுறுத்தி இயற்றிய பாடல் இது !


-----------------------------------------------------------------------------------------------

புறநானூறு - பாடல்.195.

-----------------------------------------------------------------------------------------------

பல்சான்  றீரே  பல்சான்  றீரே !

கயன்முள்  ளன்ன  நரைமுதிர்  திரைகவுட்

பயனின்  மூப்பிற்  பல்சான்  றீரே !

கணிச்சிக்  கூர்ம்படைக்  கடுந்திற  லொருவன்

பிணிக்குங்  காலை  யிரங்குவிர்  மாதோ;

நல்லது  செய்த  லாற்றீ  ராயினும்

அல்லது  செய்த  லோம்புமி  னதுதான்

எல்லாரு  முவப்ப  தன்றியும்

நல்லாற்றுப்  படூஉ  நெறியுமா  ரதுவே.

 

------------------------------------------------------------------------------------------------

 சந்தி பிரித்து எழுதப்பட்ட பாடல்:

------------------------------------------------------------------------------------------------

 

பல் சான்றீரேபல் சான்றீரே!

கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்

பயன்இல் மூப்பின் பல் சான்றீரே!

கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்,

பிணிக்கும் காலை இரங்குவிர் மாதோ!

நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்

அல்லது செய்தல் ஓம்புமின் ! அதுதான்

எல்லாரும் உவப்பதுஅன்றியும்

நல்ஆற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே!

 

------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

------------------------------------------------------------------------------------

நூல்கள் பலவும் கற்று நுண்மாண் நுழை புலம் மிக்கவர்களாகத் திகழ்வதாக ஊரார் மெச்சும் சான்றோர்களே !கெண்டை மீனின் முள் போல விறைத்து நிற்கும் நரை முடியும்முதுமை எய்தியதால் கன்னங்களில் வரி வரியாகச் சுருக்கமும் ஏற்பட்டு. பயன் இல்லாத முதுமையை அடைந்துவிட்ட சான்றோர்களே ! உங்களுக்கு  ஒன்று சொல்கிறேன் கேளுங்கள் !

 

இறப்பு உங்களைத் தழுவும் தருணத்தில்ஐயகோ ! தவறு செய்து விட்டோமே ! என்று வருத்தப்படுவதால் பயனில்லை ! நீங்கள் பிறருக்கு நன்மை தரும் செயல்களைச் செய்யாவிட்டாலும் கூடப் பாதகமில்லைதீமை விளைவிக்கும் செயல்களைச்  செய்யாமல் தவிர்த்திட வேண்டும்.. அதைத்தான் இந்த உலகமே உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறதுஅதுமட்டுமன்றி,  உங்களது பிறவிப் பயனை அடைவதற்கு இட்டுச் செல்லும் நன்னெறியும் அதுவொன்றேதான் !

 

------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற் பொருள்:

------------------------------------------------------------------------------------------------

 

பல்சான்றீரே = பல குணங்கள் அமைந்த ; சான்றீரே = சான்றோர்களே ; கயல் = கெண்டை மீன் ; முள் = முள் ; அன்ன = போல (உவம உருபு) ; நரை = நரைத்த தலைமுடி ; முதிர் = முதிர்ந்த ; திரை கவுள் = முதுமையால் ஏற்படும் தோற் சுருக்கம் ; (கவுள் = கன்னம்) ; பயன் இல் = பயன் இல்லாத ; மூப்பின் = முதுமையின் ; பல் சான்றீரே = பல குணங்கள் அமைந்த சான்றோர்களே !


கணிச்சி = மழு (கோடரி) ; கூர் = கூர்மையான ; படை = படைக்கலன் ; கடுந்திறல் = கடுமையான வலிமை கொண்ட ; ஒருவன் = கூற்றுவன் ; பிணிக்கும் கயிற்றால் பிணைத்து இழுத்துச் செல்லும் ; காலை = நேரத்தில் ; இரங்குவிர்  = வருந்துவீர் ; (மாதோ - அசைச்சொல்) ; நல்லது செய்தல் = நன்மை செய்தல் ; ஆற்றீர் = தளர்ந்து விலகுவீர் ; ஆயினும் = ஆனாலும் ; அல்லது செய்தல் = தீமை செய்தல் ; ஓம்புமின் = தவிர்த்திடுக ; அது தான் = அந்தச் செயல் தான் ; எல்லாரும் = அனைவரும் ; உவப்பது = மகிழ்வது ; அன்றியும் = மட்டுமல்லாமல் ; நல் ஆற்று = நல்ல வழி ; படூஉம் = படுவதும் ; நெறியும் =  நீதி, அறம், ஒழுக்கம்  ; (ஆர் - அசைச்சொல்) ; அதுவே = அது தான்.


  ஆக்கம் + இடுகை:

 வை.வேதரெத்தினம்,

 ஆட்சியர்,

 தமிழ்ப் பணி மன்றம்

 [தி.: 2050,மடங்கல்(ஆவணி,19]

 {05-09-2019}