விரும்பும் பதிவைத் தேடுக !

Friday, 24 April 2026

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (10) வழிபடுவோரை வல் அறிதீயே !

 

    புறநானூறு (10) வழிபடு வோரை வல்லறி தீயே !

===========

பாடியோர்: 

===========

இப்பாடலைப் பாடியவர் ன்பொதி பசுங்குடையார். இவரது நான்கு பாடல்கள் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளன.  (10, 203, 370, 378). இப்புலவரின் உண்மையான பெயர் தெரியவில்லை. பெயருக்கான காரணமும் தெரியவில்லை !

====================

பாடலின் பின்னணி:

====================

இப்பாடலில் ஊன்பொதி பசுங்குடையார் சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னியின் குணநலன்களைப் புகழ்ந்து பாடுகிறார் !

================

பாடப்பட்டோன்: 

================

பாடப்பட்டோன் சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி. நெய்தலங்கானல் என்பது அவன் பிறந்த ஊராக இருக்கக் கூடும். வன் பரதவரையும், வடுகரையும் வென்று புகழ் கொண்டவன். பாமுளூர் என்னுமிடத்தும் செருப்பாழி என்னுமிடத்தும் பகைவரை வென்றதால் முறையே பாமுளூர் எறிந்த இளஞ்சேட் சென்னி என்றும் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி என்றும் அழைக்கப்பட்டான்.

----------------------------------------------------------------------------------------

புறநானூறு- பாடல் எண்: (10)  வழிபடுவோரை வல்லறி 

தீயே!

----------------------------------------------------------------------------------------

வழிபடு வோரை வல்லறி தீயே;
பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே;
நீமெய் கண்ட தீமை காணின்
ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி;
வந்து, அடி பொருந்தி முந்தை நிற்பின்
தண்டமும் தணிதிநீ பண்டையிற் பெரிதே;
அமிழ்துஅட்டு ஆனாக் கமழ்குய் அடிசில்
வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை
மகளிர் மலைத்தல் அல்லது மள்ளர்
மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப;
செய்து இரங்காவினைச் சேண்விளங் கும்புகழ்
நெய்தலங் கானல் நெடியோய்!
எய்த வந்தனம்யாம் ஏத்துகம் பலவே.

===========================

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

===========================


வழிபடுவோரை வல் அறிதீயே;

பிறர்பழி கூறுவோர் மொழி தேறலையே;

நீ மெய்கண்ட தீமை காணின்

ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி;

வந்து, அடி பொருந்தி முந்தை நிற்பின்
தண்டமும் தணிதி  நீ பண்டையிற் பெரிதே;
அமிழ்து அட்டு ஆனாக் கமழ் குய் அடிசில்
வருநர்க்கு வரையா வசை  இல் வாழ்க்கை
மகளிர் மலைத்தல் அல்லது மள்ளர்
மலைத்தல் போகிய சிலைத்  தார்மார்ப;
செய்து இரங்கா வினைச் சேண் விளங்கும் புகழ்
நெய்தல் அங் கானல் நெடியோய்!
எய்த வந்தனம்  யாம் ஏத்துகம் பலவே.

====================

பாடலின் பொருள்:

=====================


நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியே !  உன்னிடம் பணிவு காட்டுபவர்களை நீ விரைந்து அறிந்து கொள்கிறாய். பிறர்மீது புறம்  கூறுவோர் சொல்லை நீ ஏற்றுக் கொள்வது இல்லை. ஒருவர் செய்தது தவறு (தீமை) என்று  கண்டால் அறவழி நின்று ஆராய்ந்து  அவரைத் தண்டிக்கிறாய். தவறு செய்தவர்கள், உன் முன் அடிபணிந்து நின்றால் அவர்கள் தவறைப் பொறுத்தருளி, முன்பு அளித்த தண்டனையைப் பெரிதும் குறைத்து விடுகின்றாய் !

முதத்தையும் தன் சுவையால் வென்று உண்ண உண்ணத் தெவிட்டாத மணங்கமழும் உணவை வருவோர்க்குக் குறைவின்றி வழங்குகிறார் உன் தேவியார். மாசு மறுவற்ற இல்வாழ்க்கை நடத்தும் அவர் தழுவுவதை அல்லாது பகைநாட்டு  வேந்தர் உன்னோடு போர் செய்வதற்கு அஞ்சும் மார்பை டையவனே ! வருந்தத்தக்க செயலெதுவும் செய்யாத தன்மையும், பரந்த புகழும் உடையவனே ! நெய்தலங்கானம் என்னும் ஊரைச் சார்ந்த பெரியோனே! யாம் உன்னை அணுகி வந்தோம். உன் பெருமைகளைப் பாடிப் போற்றுகிறோம். எமக்கும் அருள்வாயாக !

=====================

அருஞ்சொற்பொருள்:

=====================

வல் அறிதி = விரைந்து அறிந்து கொள்கிறாய்; "அறிதியே" என்பது "அறிதீயே" என்று நீண்டது நீட்டல் விகாரம்.  தேறல் = தெளிதல்; அத்தக ஒறுத்தி = தீமைக்குத் தக்கவாறு தண்டிக்கிறாய்; அடுதல் = சமைத்தல்; ஆனாமை = தணியாமை; கமழ்தல் = மணத்தல்; குய் = தாளிதம்; அடிசில் = சோறு, உணவு; வரை = அளவு; வரையா = குறையாத; அளவில்லாத; வசை = பழி; மலைத்தல் = போர்செய்தல்; பகை கொள்ளல்; மள்ளர் = வலிமையுடையவர்; சிலை = வானவில்; தார் = மாலை;  இரங்கல் = உள்ளம் உருகுதல் (வருந்துதல்); சேண் = சேய்மை (தூரம்);  நெடியோன் = பெரியோன்; எய்துதல் = அணுகுதல், அடைதல்; ஏத்துதல் = புகழ்தல்.

-------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

“புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு; 2057, மேழம் (சித்திரை)11]

(24-04-2026)

-----------------------------------------------------------------------------------



Wednesday, 22 April 2026

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) 246 - பல்சான்றீரே! பல்சன்றீரே!

 

புறநானூறு (246) பல்சான்றீரே ! பல்சான்றீரே !

பாடலின் பின்னணி !

-----------------------------------------------

பாண்டிய மன்னன் பூதப்பாண்டியன் கதுமென (திடீரென) இறந்துபோகிறான். பாண்டிய நாடே துக்கத்தில் மூழ்கியது. அவன் மனைவியும் பட்டத்து அரசியுமான பெருங்கோப்பெண்டு இறந்த கணவனை எரிக்க மூட்டிய தீயில் தானும் விழுந்து சாகச்செல்கிறாள். அரசவைச் சான்றோர்களும் அமைச்சர்களும் அரசி உடன்கட்டை ஏறுவதை விரும்பவில்லை; தன் முடிவைக் கைவிடுமாறு அரசியைத் தடுக்கின்றனர். அவர்களுக்கு மறுமொழி கூறும் வகையில் அரசி ஒரு பாடல் வழியாகத்  தன் கருத்தை எடுத்துரைக்கிறாள் ! இதோ அந்தப் பாடல் !

--------------------------------------------------------------------------

புறநானூறு பாடல் (246) பல் சான்றீரே ! பல்சான்றீரே !

-------------------------------------------------------------------------

பல் சான்றீரே ! பல் சான்றீரே !

'செல்க' எனச் சொல்லாது, 'ஒழிக' என விலக்கும்,

பொல்லாச் சூழ்ச்சிப் பல் சான்றீரே !

அணில்வரிக்  கொடுங்காய்  வாள்  போழ்ந்திட்ட

காழ்போல்  நல்விளர்  நறுநெய் தீண்டாது,     

அடையிடைக்  கிடந்த  கைபிழி பிண்டம்,

வெள்ளெட்  சாந்தொடு, புளிப்பெய் தட்ட

வேளை  வெந்தை, வல்சி  ஆக,

பரற்பெய்  பள்ளிப்பாய்  இன்று  வதியும்

உயவல்  பெண்டிரேம்  அல்லேம்  மாதோ;         

பெருங்காட்டுப்  பண்ணிய  கருங்கோட்டு  ஈமம்

நுமக்கு அரிதாகுக  தில்ல; எமக்கெம்

பெருந்தோட் கணவன்  மாய்ந்தென, அரும்பற

வள்ளி  ழவிழ்ந்த   தாமரை

நள்ளிரும்   பொய்கையும்   தீயுமோ ரற்றே!         

-----------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்.

----------------------------------------------------------------

பல் சான்றீரே ! பல் சான்றீரே !

'செல்க' எனச் சொல்லாது, 'ஒழிக' என விலக்கும்,

பொல்லாச் சூழ்ச்சிப்  பல் சான்றீரே!

அணில் வரிக் கொடுங் காய் வாள் போழ்ந்திட்ட

காழ் போல் நல் விளர்  நறு நெய் தீண்டாது,     

அடை இடைக் கிடந்த கை பிழி பிண்டம்,

வெள் எள் சாந்தொடு, புளிப் பெய்து அட்ட

வேளை வெந்தை, வல்சி ஆக,

பரல் பெய் பள்ளிப் பாய் இன்று வதியும்

உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ;         

பெருங் காட்டுப்  பண்ணிய  கருங்  கோட்டு  ஈமம்

நுமக்கு அரிதாகுக தில்ல; எமக்கு எம்

பெருந் தோள் கணவன் மாய்ந்தென, அரும்பு அற

வள் இதழ் அவிழ்ந்த தாமரை

நள் இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே!         

--------------------------------------------------

பாடலின் பொழிப்புரை:

--------------------------------------------------

பல்லாற்றானும் பண்பில் மேம்பட்ட சான்றோர்களே ! இறந்த என் கணவரின் ஈமத்தீயில் விழுந்து நானும் இறந்து போகக் கூடாது என்று சொல்லி என்னைச் சூழ்ந்துகொண்டு தடுத்து நேரிய வழியை  மறித்து நிற்கும் சான்றோரே !

 

அரிந்த வெள்ளரிக்காய் விதை போல் தோன்றும்  வெள்ளை நிறமான மணமுள்ள நெய் கலவாத பானையின் அடியில் கிடக்கும் பழைய சோற்றைக் கைப்பிடி அளவு எடுத்து, பிழிந்து இலையில் இட்டு, வெள்ளை எள் துவையலும், புளிச்சாறு  ஊற்றி  வேகவைத்த  வேளைக் கீரையும் மட்டுமே உணவாக  உண்டும்,  பரப்பிய பரல்-கற்களைப் பாயாக்கிப் படுத்துக்கொண்டும், கைம்மை நோன்பு நோற்று வருந்தி வாழும் பிற பெண்டிரைப் போன்றவள்  (உய்ய-வல்ல-பெண்டிர்)  அல்லள்  நான்!

 

எல்லாருக்கும் இடம் கொடுக்கும் சுடுகாட்டில் கரிய கட்டைகளை அடுக்கிச் செய்யப்பட்ட பிணப்படுக்கை உங்களுக்குத் தாங்க முடியாததாக இருக்கலாம்;  பெரிய தோள்களையுடைய என் கணவர் இறந்ததால், எனக்கு அவர் எரிந்துகொண்டிருக்கும்  ஈமத் தீ சூழ்ந்த  வெம்மை நிறைந்த பிணப்படுக்கையும், மலர்ந்த தாமரை மலர்கள் நிறைந்த குளிர்ந்த நீர் செறிந்த பெரிய குளமும் ஒரே தன்மையதுதான்!

(ஆகையால் நான் ஈமத் தாமரைப் பொய்கையில் குளிக்கிறேன், என்னைத் தடுக்காதீர்கள் !)

 ----------------------------------------

அருஞ்சொற்பொருள்.

------------------------------------------ 

பல் சான்றீரே  பல் சான்றீரே = பல்வகையிலும் சான்றாண்மை மிக்க  பெரியோர்களே; 'செல்க' எனச் சொல்லாது = அரசியார் விரும்புவது போல “உடன்கட்டை ஏறுக”  எனச் சொல்லி விடை தராது; 'ஒழிக'   என   விலக்கும்  = வேண்டாம் எனத் தடுத்து இறைஞ்சும்; பொல்லாச் சூழ்ச்சிப் பல் சான்றீரே = தவறாக முடிவெடுத்து என்னைத் தடுக்கும் சான்றாண்மை மிக்க பெரியோர்களே; அணில் வரிக் கொடுங் காய் = அணிலின் முதுகு மீது தோன்றும் வரிகள் போல; கொடுங்காய் =  வளைந்த   வெள்ளரிக்காய்; வாள் போழ்ந்திட்ட= வாளால் அரிந்திட்ட ;  


காழ் போல் = விதைகள் போலக் காட்சியளிக்கும் ; நல் விளர் நறு நெய் தீண்டாது = நறுமணமிக்க ஆவின் நெய் சேர்க்காமல்; அடை இடைக் கிடந்த கை பிழி பிண்டம் = ஒரு கைப்பிடி பழைய சோற்றை எடுத்துப் பிழிந்து அகன்ற இலையில் வைத்து ; வெள் எள் சாந்தொடு = வெள்ளை எள்ளை அரைத்துச் செய்த துவையலுடன் ;  புளிப் பெய்து  = புளிச்சாறு சேர்த்து; அட்ட = வேக வைத்த;  வேளை வெந்தை, வல்சி ஆக = வேளைக் கீரையை உணவாகஉண்டும்; பரல் பெய் பள்ளிப் பாய் இன்று வதியும் = சிறு கற்கள் நிறைந்த பாய் விரிக்காத வெற்றுத் தரை மீது படுத்துறங்கியும் (தமது ஆற்றொணாத் துன்பத்தை வெளிப்படுத்தி); உயவல்  பெண்டிரேம்  அல்லேம்  மாதோ = கைம்மை நோன்பு நோற்று வாழ்கின்ற ஏனைய  பெண்டிரைப் போல அல்லள் நான்;  


பெருங் காட்டு = சுடுகாட்டில்;   பண்ணிய  = செய்த ; கருங் கோட்டு  ஈமம் = கரிய மரத்துண்டுகளை அடுக்கிச் செய்த பிணம் எரிக்கும் மேடையில் எழுகின்ற ஈமத் தீ; நுமக்கு  அரிதாகுக ;  உங்களுக்கு அரிதாக இருக்கட்டும்; உங்களைத் தீண்ட வேண்டாம்; எமக்கு = எனக்கு; எம் பெருந்தோள் கணவன் = பருத்த வலிமையான கைகளையுடைய என் கணவனாகிய பாண்டிய மன்னன்; மாய்ந்தென  =  இறந்ததால்;

 

அரும்பு அற வள் இதழ் அவிழ்ந்த தாமரை = மொட்டுகள் அவிழ்ந்து மலர்ந்த தாமரை மலர்கள் நிறைந்த;  நள்   இரும்     பொய்கையும்   = குளிர்ச்சி நிறைந்த பெரும் பொய்கை நீரும்;   தீயும்   ஓரற்றே = வெம்மை மிக்க ஈமத் தீயும் ஒன்று தான்;         (ஆகையால் நான் உடன் கட்டை ஏறுகிறேன்; என்னைத் தடுக்காதீர்கள்)

 -------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

“புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2057, மேழம் (சித்திரை) 09]

{22-04-2026.}

----------------------------------------------------------------------------------


 


Monday, 3 October 2022

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (70) தேஎம் தீந்தொடைச் சீறியாழ் ! !

 கொள்ளக் கொள்ளக் குறையாத செல்வ வளம் மிக்கது கிள்ளி வளவனின் அரண்மனை !

-----------------------------------------------------------------------------------------

பாடலின் பின்னணி:

-----------------------------------------------------------------------------------------

 

புலவர் கோவூர் கிழார் கிள்ளி வளவனின் அரண்மனையிலிருந்து தன் இல்லம் திரும்பிக் கொண்டிருக்கிறார். அவரை எதிர்கொண்ட பாணர் ஒருவர், புலவரை அடையாளம் கண்டு கொண்டு, ”ஐயனே என் பாடலைப் கேட்டருள்வீராக”  என்று வேண்டுகின்றார். புலவர் அந்தப் பாணரிடம், ”வேண்டாம் பாணரே ! நீர் கிள்ளி வளவனைச் சென்று காண்பிராக; அவன் உமக்கு உறுதியாகப் பரிசில்கள் வழங்கி மகிழ்விப்பான்: என்று கூறி பாணரை மன்னனின் அரண்மனைக்கு ஆற்றுப்படுத்தி வைக்கிறார் !

 

-------------------------------------------------------------------------------------

பாடல் எண் (70)

-------------------------------------------------------------------------------------

தேஎம் தீம் தொடைச் சீறியாழ்ப் பாண!

'கயத்து வாழ் யாமை காழ் கோத்தன்ன

நுண் கோல் தகைத்த தெண் கண் மாக் கிணை

இனிய காண்கஇவண் தணிகஎனக் கூறி;

வினவல் ஆனா முது வாய் இரவல!

தைஇத் திங்கள் தண் கயம் போல,

கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியல் நகர்,

அடுதீ அல்லது சுடுதீ அறியாது;

இரு மருந்து விளைக்கும் நல் நாட்டுப் பொருநன்,

கிள்ளி வளவன் நல் இசை உள்ளி,

நாற்ற நாட்டத்து அறு கால் பறவை

சிறு வெள் ஆம்பல் ஞாங்கர் ஊதும்

கை வள் ஈகைப் பண்ணன் சிறுகுடிப்

பாதிரி கமழும் ஓதிஒள் நுதல்,

இன் நகை விறலியொடு மென்மெல இயலிச்

செல்வைஆயின்செல்வை ஆகுவை;

விறகு ஒய் மாக்கள் பொன் பெற்றன்னதோர்

தலைப்பாடு அன்றுஅவன் ஈகை;

நினைக்க வேண்டாவாழ்கஅவன் தாளே!

 

------------------------------------------------------------------------------------

பொருளுரை:

------------------------

சீறியாழ்ப் பாணனே குளத்து ஆமையைக் கோத்து வைத்தது போலக் கிணை” என்னும் முரசினை கொம்பில் இயைத்து வைத்துள்ளாய்உன் பாடலுடன் இழைந்து வரும் முரசு  இசையைக் கேட்பீராக என்று என்னை அழைத்து வேண்டுகின்றாய் பாணனே ! தை மாதத்தில் நீர் நிறைந்திருக்கும் தண்குளம்போல் கொள்ளக் கொள்ளக் குறையாத செல்வ வளம் மிக்கது கிள்ளி வளவனின் அரண்மனை !

 

அவன் நாட்டு மக்கள் அடுப்புத் தீயைக் கண்டு உள்ளனர். சூரியனின் வெப்பத்தை அறிந்துள்ளனர். இவையன்றி வேறு வெம்மைகளை  அவர்கள் கண்டது இல்லை. அவன் ஆட்சியில் செம்மையைத்தான் அவர்கள் காண்கின்றனர். அத்தகைய தலைவன் கிள்ளி வளவனின் நற்புகழைக் கேட்டு அறிந்து அதனை மதித்து இனிய நகைமொழி உடைய விறலியோடு நீ சென்றால் செல்வம் பெற்று உயர்வாய் !

 

விறகு வெட்டி எடுத்துவரக் காட்டுக்குச் செல்லும் ஒருவனுக்கு எதிர்பாராமல் பொன் கிடைப்பதைப் போன்றது அன்று அவன் ஈகை ! அவனது அருள் கிடைக்குமோ கிடைக்காதோஅவனிடமிருந்து  பொன்னும் பொருளும் பெறுவோமோ இல்லையோ என்று ஐயுறுதல் வேண்டாம். ; நீ பரிசில் பெறுவது உறுதி ! சென்று வருவாயாக ! வள்ளன்மை மிக்க கிள்ளிவளவன் நீடூழி வாழ்வானாக !

--------------------------------------------------------------------------------------

சொற்பொருளுரை:

---------------------------------

01. தேஎம் தீம் தொடை = தேன்போல இனிய  இசை எழுப்பும் நரம்புகள் பொருத்தப் பெற்ற,

02. சீறியாழ்ப் பாண = (சிறுமை யாழ் = சீறியாழ்யாழில் சிறிய வகையான சீறியாழை  யாழை இசைக்கும் பாணனே,

03.   கயத்து வாழ் யாமை = குளத்தில் வாழும் ஆமையை,

04.   காழ் கோத்தன்ன = இரும்புக் கம்பியில் கோத்ததைப் போல,

05.   நுண் கோல் தகைத்த = மெல்லிய குச்சியில் பிணைத்த,

06.  தெண் கண் மாக் கிணை = ஒற்றைக் கண்ணுடைய கிணை” என்னும்  முரசு எழுப்புகின்ற,

07.  இனிய காண்கஇவண் தணிகஎனக் கூறி = இசையைக் கேட்க இங்கு அமர்க என்று,

08. வினவல் ஆனா முது வாய் இரவல = என்னை அழைத்து வினவுகின்றாய் இரவலனே,

09.  தைஇத் திங்கள் தண் கயம் போல = தை மாதத்தில் குளிர்ந்த நீர் நிரம்பியிருக்கும் குளம் போல,

10.  கொளக் கொளக் குறைபடாக் கூழுடை வியல் நகர் = கொள்ளக் கொள்ளக் குறையாத செல்வ வளம் மிக்க கிள்ளி வளவனின் பெரிய நகரம்,

11.   அடுதீ அல்லது சுடுதீ அறியாது = அடுப்புத் தீயை அல்லாது சுடுகின்ற வேறு வெப்பத்தை அறியாது.

12. இரு மருந்து விளைக்கும் நல் நாட்டுப் பொருநன் = இரு மருந்துகளாகிய நீர் வளமும் நெல் வளமும் மிக்க நாட்டின் தலைவனாகிய,

13.   கிள்ளி வளவன் நல் இசை உள்ளி = கிள்ளி வளவனின் நற்புகழைக் கேட்டறிந்து மனத்தின் இருத்தி  

14.  நாற்ற நாட்டத்து அறு கால் பறவை = மலர்களின் நறுமணத்தால் ஈர்ப்புற்றுசென்று அவற்றை அறிந்தாய்வு செய்யும் தேனீக்கள்,

15.  சிறு வெள் ஆம்பல் ஞாங்கர் ஊதும் = சிறிய வெண்ணிற அல்லி மலர்களை அடைந்து தேனுண்ணும்,

16.  கை வள் ஈகைப் பண்ணன் = கை நிறைய அள்ளிக் கொடுக்கும் வள்ளன்மை உடைய பண்ணன் என்னும்,

17.  சிறுகுடிப்பாதிரி கமழும் ஓதி = சிறு குடியிற் பிறந்த பாதிரிப்பூக்கள் சூடிய மணம்  மிகுந்த கூந்தலை உடைய,

18.  ஒள் நுதல்இன் நகை விறலியொடு = ஒளிமிகு நெற்றியையும் இனிய புன்னகையையும் உடைய உனது நாட்டியப் பெண்ணாகிய விறலியோடு,

19. மென்மெல இயலிச் செல்வைஆயின் = மெல்ல மெல்ல நடந்து அவனிடம் செல்வாயாகின்,

20.   செல்வை ஆகுவை = செல்வம் மிக்கவன் ஆகிவிடுவாய் !

21.  விறகு ஒய் மாக்கள் பொன் பெற்றன்னதோர் = விறகு வெட்டச் சென்ற மக்கள் பொற் குவியலை அடைந்தது போன்ற, 

22.   தலைப்பாடு அன்று = அரிய நிகழ்வு என,

23.   அவன் ஈகை = கிள்ளி வளவனது ஈகைத் தன்மையை,

24.   நினைக்க வேண்டா = நினைக்க வேண்டா,

25. வாழ்கஅவன் தாளே = அப்படிப்பட்ட கிள்ளி வளவன் நீடூழி வாழட்டும் !

 

-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

“புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, கன்னி (புரட்டாசி) 15]

{02-10-2022}

----------------------------------------------------------------------------------